#அம்மாவின்_சமையல்_பேச்சு
பேச்சிலேயே சமையல்னா “வாயில வடை சுடுறதான்னு நீங்க கேட்பது எனக்கும் கேட்கிறது! பொதுவா அவன் நல்லா அல்வா கிண்டினான்பா.. என்னய்யா இப்படி போட்டு வறுக்குற.. யப்பா கடலை கருகுது.. வேணாம் என் வாயைக் கிளறாதே போன்ற சொற்றொடர்கள் எல்லாம் நமது வாய் பேச்சைக் குறிப்பவை!
ஒரு நல்ல சமையலைச் செய்து அதை திருப்தியாக சாப்பிட்ட உணர்வை சிலர் தங்கள் பேச்சில் வரமாக வாங்கி வந்திருப்பார்கள் அப்படி வரம் வாங்கி வந்தவர்களில் எங்க தனம் அம்மாவும் ஒருவர்! அம்மாவின் கைமணத்திற்கு இணையானது அவரது பேச்சு மணம்! அம்மாவிற்கு எழுதப் படிக்கத் தெரியாது! ஒருபோதும் அவர் அதை..
பெரும் குறையாகக் கருதியதில்லை! அம்மாவிற்கு இயல்பிலேயே நல்ல க்ரியேட்டிவிட்டி! அவர் பார்த்த ஒரு சம்பவத்தை சிரிக்க சிரிக்க நல்ல உவமைகளுடன் விவரித்துக் கூறும் தனம் FM பேச்சைக் கேட்க அக்கம் பக்க நேயர்கள் அன்றே ஏராளமானோர் இருந்தனர்! அம்மாவின் சமையல் பற்றிய பேச்சுக்கு வருவோம்!
யாராவது ஒரு சமையல் செய்முறை கேட்டால் நாம் அதை சொல்வதற்கும் அம்மா சொல்வதற்கும் அத்தனை வேறுபாடுகள் இருக்கும்! இப்படியெல்லாம் சொல்ல முடியுமான்னு வியக்கவும் ரசிக்கவும் வைத்திடுவார்! தாளிக்க நிறைய எண்ணெய் ஊற்று என்பதை சட்டியில ‘நல்லா சளசளன்னு எண்ண ஊத்து’ என்பார்.
கடலை பருப்பு, வரமிளகா, மல்லி, மிளகு போட்டு நல்லா வாசம் வர்ற மாதிரி வறுக்கணும், கடல வாசம் கமகமன்னு வரணும், மல்லி வறுபடுற வாசம் வாசப்படி தாண்டி வீசணும், இந்த மிளகா காரலா நெடியடிக்ககூடாது என்று அவர் விவரிக்கும் போதே ஹட்ச் என்றோ ஏர்டெல் என்றோ நமது மூக்கில் ஒரு தும்மல் வரும்! ஆம்!
வறுக்குற இடத்தில் நாமும் இருப்பது போல அந்த நெடி நமக்குள் ஏறும்! கறியை நல்ல இறுக்கமா, கெட்டியா வதக்கணும் என்பதை அம்மா கறியில இருக்க தண்ணி வத்த நல்லா சுருளச் சுருள வதக்கணும்டி என்பார்! அவர் சொல்வதே அழகாக இருக்கும்! மல்லிகைப்பூ போல, பஞ்சு போல இட்லி நமக்கு நல்லா தெரியும்!
அம்மா மென்மையான இட்லியை நல்லா திர்னவேலி அல்வா மாதிரி இட்லி என்பார்! அல்வா மாதிரி இட்லி கரகரன்னு காராபூந்தி போல சட்னி என்னும் அவரது உவமை எங்க வீட்டில் பிரபலமான ஒன்று! அப்பா ஸ்வீட் மாஸ்டர் என்பதால் இந்த உதாரணங்களை அம்மா சொல்லியிருக்கலாம்! அதிலும் அவர் க்ரியேட்டிவ் மின்னும்!
கொழம்பு கொதிச்சதும் இறக்கி வச்சி உள்ளங்கை நெறைய மல்லித்தழைய எடுத்து கொரங்கு மாலைய பிச்ச மாதிரி பிச்சு போடு என்பார்! பிச்சு போடு ஓகே ஆனா அங்கும் குறும்பாக ஒரு குரங்கு வந்து குதித்திடும்! நல்லி எலும்பு கொழம்பு வச்சா பாவாட கழண்டா மாதிரி கறி எலும்பிலிருந்து கழண்டு விழணும் என்பார்!
நெஞ்செலும்பு கறியின் சவ்வு போன்ற மென்மையான எலும்பை தேங்காய்சில்லு மாதிரி கரிச்னு இருக்கும் கடிச்சு சாப்பிடுனுவார் குழைந்த சோறை அம்மா ‘நல்லா கெட்டித் தயிர் போல சோத்தை வடிச்சு வச்சிருக்கேன்யா எனும் போது எனது வியப்பு இன்னும் அதிகரிக்கும்! எப்படி இதெல்லாம் இவருக்கு இயல்பா வருதுன்னு!
சட்டியில நல்லெண்ணெய் ஒரு கரண்டி ஊத்தி 10 உரிச்ச சின்ன வெங்காயம், 4 பச்ச மொளகா கீறிப் போட்டு நல்லா பொன்னா (தங்கநிறம்) வறுத்துட்டு 2 துண்டு கருவாடு போட்டுன்னு அம்மா சொல்லும் போதே வாயில் இருந்து 2 சொட்டு உமிழ்நீர் கூட சொட்டலைன்னா அவன் மனிதப் பிறவியே இல்லை எனலாம்!
சப்பாத்திக்கு அம்மா சொல்லும் ஒரு உதாரணம் “உங்கப்பா சப்பாத்தி சுட்டா மட்டும் தண்ணியில நனைச்ச பேப்பர் மாதிரி சப்பாத்திய ஈசியா பிய்க்க வருது நாம சுட்டா துணிய பிச்ச மாதிரி இருக்குனு! அம்மாவின் இந்த உவமை எத்தனை ரசனை மிகுந்தது என்பதை ஆழ்ந்து கவனித்தால் புரியும்! அவ்வளவு அர்த்தமிருக்கும்!
கெட்டி சாம்பாருக்கு அம்மா சொல்லும் உவமை இலையில நத்தை மாதிரி சாம்பார் ஊர்ந்து வரணும் என்பார்! அம்மாவின் பேச்சில் தான் எத்தனை அழகியல் ! பாட்டி, மாமா, சித்தி, அப்பா, அண்ணன் தம்பி என ஒரு பெரிய சமையல் குடும்பத்தில் பிறந்தது நான் பெற்ற பாக்கியம்! ஆம்! என்றென்றும் எனது நினைவில் மணக்கிறது..
🥘 தனம் அம்மாவின் சமையல் பேச்சு 🥘
No comments:
Post a Comment