#என்_பூகம்ப_அனுபவம்
2010 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்கா சென்றிருந்தோம். அங்கே லாஸ்ட் சிட்டி என்றும் அழைக்கப்படும் உலகின் சிறந்த பொழுது போக்கு சுற்றுலாத் தலங்களில் ஒன்றான சன் சிட்டியின் 7 நட்சத்திர விடுதியில் தங்கும் நல்வாய்ப்பு கிட்டியது! அவ்வை சண்முகி படத்தில் வரும் காதலி காதலி பாடல் படமாக்கப்பட்ட இடம்! அங்கே அமைந்து இருக்கும் அம்யூஸ்மென்ட் பார்க்கில் கூட்டம் அலை மோதுகிறது.
நேரம் காலை 10 மணி! அங்கிருந்த இருவர் பேசியதைக் கேட்டோம் “பூகம்பம் எத்தனை மணிக்குங்க? அதுவா காலையில் 10:30 க்கு இருக்கு.. அதை விட்டா 12:30 அடுத்து 3:30” எதோ பஸ்சுக்கு நேரம் சொல்வது போல சொல்லிக்கொண்டு போனார்கள். நாங்களும் அவர்களைத் தொடர்ந்தோம்.எங்களோடு பலரும் பூகம்பம் பற்றி பேசிக் கொண்டும் கூட்டமாக கோக் குடித்துக்கொண்டும்..
காதலிகளை அணைத்துக் கொண்டும் முத்தமிட்டுக் கொண்டும் வேகமாக நடந்து கொண்டிருந்தார்கள். எனது ஆச்சரியம் எல்லாம் அதுவல்ல எப்படி இவர்கள் பூகம்பம் வருவதை முன்கூட்டியே அதுவும் நேரத்தை குறிப்பிட்டு சொல்கிறார்கள் என்ற ஆச்சர்யம் தான்! ஆனால் அதற்கு விடை அங்கு கிடைத்தது. நாங்கள் எல்லோரும் ஆவலாய் குவிந்த இடம் “எர்த் க்வேக் ஏரியா"..
இங்கு செயற்கையாக பூகம்பம் ஏற்படுத்துகிறார்கள் அதிக பட்சம் 8 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டால் கிடைக்கும் அனுபவத்தை இங்கு பெறலாம்! அந்த இடமும் ஒரு கல் குகை போல உச்சியில் ஒரு யானைத் தலை கல்லில் செதுக்கப்பட்டிருந்தது. பூகம்பம் ஏற்பட்டால் கட்டிடங்களில் வரும் விரிசல் போல அந்த குகை முழுவதும் ஆங்காங்கே விரிசலுடன் வடிவமைத்து இருந்தார்கள்
குகையின் உட்புறம் நுழைந்தோம் உட்புற சுவர்களில் நம்ம ஊரு பேருந்துகளில் நிற்பவர்கள் பிடிக்க கைப்பிடிகள் தொங்குமே அது போன்ற நம் நெஞ்சு உயரத்திற்கு சுவர் எங்கும் கைப்பிடிகள் இருந்தன! யாரும் கீழே விழாமல் இருக்க நிறைய பாதுகாப்பு ஏற்பாடுகள். எல்லோரும் காத்திருந்தோம் ஸ்பீக்கரில் அறிவிப்பு வந்தது என்ன செய்ய வேண்டும் செய்யக்கூடாது என்று..
சிவப்பு விளக்குகள் அந்த குகையில் பளிச்சிட மிகப் பெரிய சைரன் அடித்ததும் கவுண்ட்டவுன் ஆரம்பிக்க 0 வந்ததும் அதிரும் இசையுடன் பூமி அதிர ஆரம்பித்தது! காலடியில் திரெட் மில்லில் நடப்பது போல பூமி நழுவ ஆரம்பித்தது 3 - 4ரிக்டர் என LED WALL சொன்னது! அடுத்து சில வினாடிகளில் வல இடமாக ஆட (6 ரிக்டர்) அடுத்து நம்மை தடுமாற வைத்து தள்ளுவது போல குலுங்க இப்போது..
பலர் அலற ஆரம்பித்து விட்டார்கள் (8ரிக்டர்) சரியாக 2 நிமிட அனுபவம்.! மீண்டும் ஸைரன் ஒலிக்க பச்சை விளக்குகள் எரிய பூகம்பம் நிறுத்தப்பட்டது! பலருக்கு முகத்தில் பீதி சிலருக்கு தலை சுற்றல் ஒவ்வாமையில் சிலர் வாந்தி எடுக்க ரெஸ்ட் ரூம் நோக்கி ஓடினார்கள். எனக்கும் லேசான தலை சுற்றல் இருந்தது. பூகம்ப அனுபவம் பெற்றவர்கள் இயல்பு நிலைக்கு திரும்ப 10 நிமிடமானது!
மிக மிக உயரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பூகம்பம் வரும் நேரத்தை அறிவித்து, அதுபற்றிய தலவல்களை சொல்லி நம்மை அதற்கு தயார்படுத்தி பிறகு கவுண்ட்டவுன் சொல்லி செயற்கையாக மனிதர்கள் உருவாக்கிய பூகம்பமே நமக்கு இப்படி என்றால் எப்போது வரும்னு நேரமே தெரியாது திடீரென இயற்கையாக ஏற்படும் பூகம்பம் எல்லாம் எவ்வளவு பெரிய இயற்கைப் பேரிடர் என அப்போது தோன்றியது!
No comments:
Post a Comment