#பகவதியின்_கை
பாலக்காட்டில் இருக்கும் ஏமூர் பகவதி அம்மன் கோவில் விசேஷமானது. அங்கு போய்விட்டு வந்தால் குடும்பத்திலுள்ள துன்பங்கள் நீங்கி நல்லது நடக்கும் என்றனர். நமக்கு தான் வாழ்க்கையில் இன்பம் என்பது IRCTCயின் பாஸ்வேர்டு போல வரவே வராதே! இங்கு போயித்தான் பார்ப்போமே என்று நான் உறுதி பூண்டு (இஞ்சி, வெங்காயம், மிளகாய்னு) முடிவெடுத்தேன்!
கேரளா என்றால் என் அன்புத் தோழி ஶ்ரீலக்ஷ்மி இல்லாமலா! அவளுக்கு போன் செய்து நீ திருச்சூரில் இருந்து கிளம்பி ‘பாலக்காடு வரூ’ என்றதும் ச்ச்சேட்டாஆஆ என்று ஆனந்தமாகக் கூவினாள். அவள் காரில் கிளம்பி.. நான் கிளம்பி எல்லாவற்றையும் Fast forwardல் ஓட்டிவிட்டு.. பாலக்காடு கல்பாத்தி ஓட்டலுக்கு வந்தால் அதோ இரண்டாவது மேசையைப் பாருங்களேன்!
பாலக்காட்டின் பலாக்காய் & பூசணி போட்ட சாம்பாருடன், எரிசேரி, புளிசேரி, பப்படம், பிரதமன்னு ஒர் வல்லிய… அடச்சே… ஒரு நல்ல உணவை ருசித்துக் கொண்டிருப்பது நாங்களே தான்! சாப்பிட்டு முடித்து கோவிலின் இருப்பிடத்திற்கு கூகுள் மேப் போட்டால் அங்கிருந்து 12 கி.மீ என்று காட்டியது! ஏறி இறங்கும் கேரள ரோலர் கோஸ்டர் சாலைகளில் ஶ்ரீலக்ஷ்மி காரை செலுத்தினாள்!
ஏமூர் என்பது நாங்கள் போக வேண்டிய ஊர்! அங்கிருக்கும் பகவதி அம்மன் தான் விசேஷம்! ஏமூர் பகவதி அம்மன் என்றால் பாலக்காடு மட்டுமல்ல கேரளாவிற்கே நன்கு தெரியும்! இந்தக் கோவிலில் அம்மனின் சிலை இல்லாது அம்மனின் கை மட்டுமே மூலவராக இருக்கும். பாட்ஷாவுக்கு மாணிக்கம் போல ‘கை’பகவதி அம்மன் என்றும் இந்த அம்மனுக்கு இன்னொரு பெயர் இருக்கிறது.!
குடும்பப் பிரச்சனைகள், நீண்ட நாட்கள் தடைபடும் காரியங்கள், திருமணத் தடை, தோஷங்கள், சாபங்கள், பாபங்கள் என தாடி பாலாஜிக்கு வாலி படத்தில் இருக்கும் வியாதிகள் போல குடும்ப பிரச்சனைகள் அனைத்திற்கும் இந்த அம்மனை வழிபட்டால் தீருமாம். இதையெல்லாம் கொஞ்சும் மலையாளம் கலந்த தமிழில் ஶ்ரீலக்ஷ்மி என்னிடம் காரை செலுத்திய படியே என் காதுகளில் ஒலித்தாள்!
நகரில் இருந்து 4 கி.மீ தாண்டியதும் பசுமை வயல்கள் தெரிந்தன. இறைவனின் தேசத்தில் இயற்கை அழகிற்கா பஞ்சம்! வாழையும், தென்னையும், நெல்லும் பச்சையாக சிரித்தன! அபாரமான நீர் வளமும் வழிநெடுக எங்களுடன் வந்தன! கேரளாவில் ஒரு சிறப்பு நம்ம ஊர் போல புறநகர் பகுதி என்பது கிடையாது. நாம் போகும் பாதையின் இரு புறமும் வீடுகள் கடைகள் அமைந்திருக்கும்.
சேட்டன்கள்.. அசட்டு மஞ்சள்/காவி நிறத்து வேட்டி அணிந்து முழங்கை வரை சுருட்டிய சட்டை அணிந்து.. பீடி வலித்துக் கொண்டோ, கட்டஞ் சாயா ருசித்துக் கொண்டோ இருந்தனர். எல்லாரது கால்களுக்கு பக்கத்திலும் மூன்றாவது காலாக குடை இருந்தது! நாளிதழ் படித்தோ அல்லது லாட்டரி ரிசல்ட் பார்த்துக் கொண்டோ மலையாளத்தில் சம்சரித்துக் கொண்டிருந்தனர்!
ஏமூர் அருகே சாலை விரிவாக்கம் நடப்பதால் வழியைத் திருப்பி விட்டிருந்தனர்! லக்ஷ்மி குழப்பமடைந்து காரை ஒரு டீக்கடையில் நிறுத்தி கண்ணாடியை இறக்க, அந்த ஊரின் ஒட்டு மொத்த மக்கட் தொகையும் அவள் கதவருகே கூடியது! ஏமூர் பகவதி.. என அவள் துவங்க, நேராப் போய் இடதுபக்கம் என்று அனைவரது குரலும் கோரஸாக ஒலிக்க அது அந்த பகவதியம்மனுக்கே கேட்டிருக்கும்!
ஶ்ரீலக்ஷ்மி கதகளி, மோகினி ஆட்டம், ஓவியம், சமையல் என பல திறமைகள் கொண்டவள்! அவளது அபாரமான கார் டிரைவிங் திறமையை இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும்! கோவிலை நெருங்கும் வேளையில் சாலையின் இடதுபக்கம் இருந்து 10 அடி நீள கருநாகம் ஒன்று சாலையை கடக்க லக்ஷ்மி ப்ரேக் போடாமல் வண்டியை குலுங்காது வளைத்து திருப்பிய விதம் அற்புதமானது!
அடி! கருநாகம் தப்பிச்சோ என்றேன்! அல்லா சேட்டா அது ராஜ நாகம் என்றாள்! அப்போதே என் நெஞ்சு அல்லு விட்டது! கோவில் வளாகத்துக்குள் நுழைந்து காரை நிறுத்தி செருப்புகளை காரில் விட்டுவிட்டு, அர்ச்சனை சீட்டு வாங்கிக் கொண்டு கோவிலுனுள் நுழைந்தோம். மிக மிக அமைதியான சூழல், அர்ச்சனை என்பது கூட அமைதியாக உரக்க மந்திரங்கள் சொல்லாமல் செய்தனர்!
கோவில் வருஷம் 16 பூர்ணம் விஸ்வநாதன் வீடு போல இருந்தது! கோவிலுக்குள் நுழைந்ததில் இருந்து மனதில் ஒரு பாஸிட்டிவான எண்ண அலைகள் வந்து மோதியது. கோவில் இப்போது கட்டுமான பணிகள் நடந்து வருவதால் அதற்கு நன்கொடை தரமுடியுமா என வற்புறுத்தாமல் கேட்டனர். அதை முடிந்த அளவிற்கு செய்து அம்மனை மனமுருக வேண்டி கோவிலுக்கு வெளியே வந்தோம்!
வெளியே கோவிலுக்கு அடுத்த காம்பவுண்ட்டில் ஒரு பெரிய கொட்டகையில் நான்கடி நீள அழகிய தந்தம் கொண்ட 10 அடி உயர யானை ஒன்று கடிகாரத்தின் பெண்டுலம் போல அதன் தலையை வலமிடமாக ஆட்டியபடி நின்றது! அதை போட்டோ எடுக்கச் சென்ற என்னைப் பார்த்ததும்… என் மீது தன் தும்பிக்கையால் ஒரு தென்னை மட்டையை வாரி எடுத்து வீசியது!
யானை மஸ்த்தில் இருக்கிறது என்றனர்! என் உடல் நலம் குணமாக மனமுருக வேண்டுதல் வைத்த ஶ்ரீலக்ஷ்மி வெள்ளியில் செய்த இரு கால்களை உண்டியலில் சேர்த்தாள். அங்கிருந்து கிளம்பும் போது ஒரு புதிய வணிகம் கிடைத்தாக எனக்கு செய்தி வர இதெல்லாம் காக்கா உட்கார பனம் பழம்னு என் பகுத்தறிவு சொல்ல.. அந்தப் புதிய நிறுவனத்தின் பெயர் ஶ்ரீபகவதி டிரேடர்ஸ்!!! 🙏🙏🙏
No comments:
Post a Comment