Thursday, 16 January 2025

3 டி.எஸ்.பாலையா

“சுண்டங்கோட்டை சூரர்” {பார்ட் - 3}

டைரக்டர் ஶ்ரீதர் மிகவும் மனவருத்தத்தில் இருந்தார், ஏனெனில் அவர் தயாரித்த காதலிக்க நேரமில்லை படத்தில் கதாநாயகிகளின் அப்பா கேரக்டரில் நடித்த எஸ்.வி. ரங்காராவ் சரியானபடி பட பிடிப்பிற்கு வந்து ஒத்துழைக்கவில்லை! கொஞ்சம் இருப்பா.. அந்த படத்தில் கதாநாயகிகளின் அப்பா நம்ம பாலையா தானே என நீங்கள் கேட்பது எனக்கும் கேட்கிறது.

ஆனால் அந்த வேடத்தில் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டவர் ரங்காராவ் தான்! சில நாட்கள் அவரை வைத்து ஷுட்டிங்கும் நடத்தி முடித்திருந்தனர். தினமும் தாமதமாய் வந்ததற்கு ஶ்ரீதர் அவருக்கு கொஞ்சம் அழுத்தம் கொடுக்க ரங்காராவ் கோபித்துக் கொண்டு இந்தப்படமே எனக்கு வேண்டாம் என தடாலடியாகப் படத்திலிருந்து விலகிவிட்டார்.

இந்த காரக்டருக்கு யாரை போடலாம் என்று தான் ஶ்ரீதர் சிந்தித்துக் கொண்டிருந்தார், ரங்காராவுக்கு மாற்று என்றால் அதற்கு இணையான ஒரு ஆள் நடிக்கவேண்டும் யார் இதற்கு பொருத்தமாக இருப்பார்? என யோசித்த வேளையில் தான் இயக்குநர் டி.ஆர். ரகுநாத் பாலையாவை ஏன் அதில் நடிக்க வைக்கக்கூடாது என்றார் ஶ்ரீதரிடம்!

பாலையாவா? வியந்தார் ஶ்ரீதர்! அப்போது வில்லன்/குணசித்திர நடிகராக மட்டுமே பாலையா அறியப்பட்டிருந்ததால் ஶ்ரீதருக்கு ஒரு சிறு தயக்கம் இருந்தது! இதில் முழுவதும் காமெடி செய்யவேண்டுமே பாலையா பொருத்தமாக இருப்பாரா என்னும் சந்தேகமே அது! ஒரு மனதாகத் ஶ்ரீதர் துணிய ஆம்! பறக்கத் தொடங்கியது பாலையாவின் நகைச்சுவை கொடி!

ஒரு வருடமாக பெரிய வாய்ப்பில்லாது இருந்த பாலையா கெட்டியாக இந்த வாய்ப்பைப் பிடித்துக் கொண்டார். படம் வெளியானதும் பாலையாவின் நகைச்சுவையால் சிரிக்காதவர்கள் தமிழ் அறியாதவர்கள் மட்டுமே. பாலையாவின் அசத்தலான உடல் மொழி, அவரது வைபரேட்டர் குரல், அதிலிருந்த பலவிதமான வித்யாசமான மாடுலேஷன் என..

படம் நெடுக்க அவர் ஆக்ரமித்திருந்தாலும் முக்கியமாக அந்தப் பேய்க்கதை கேட்கும் காட்சி செம மாஸ்! ஹிந்திப் படங்களில் காப்பியடிக்கப்படும் அளவிற்கு அந்தக் காமெடி புகழடைந்தது! இன்றும் பேசப்படுகிறது! அந்தப்படத்தில் பாலையாவின் நடிப்பு பால்பாயாசத்தில் கிடைத்த முழு முந்திரிகளாக சில வசனங்கள், நமக்கு எதுக்குங்க பிக்கும்.. நிக்கும்.. (பிக்னிக்)

‘அசோகர்ர்ர் உங்க மகரா? ‘உன்ன புள்ளையா பெத்தேம்பாரு என் புத்திய ஷெருப்பாலயே அடிக்கணும்.. ஷெருப்பாலயே அடிக்கணும்’ ‘ஹஹ்ஹஹா கோழப்பய.. கோழப்பய’ ‘ஒத்தப்பொண்ணு உள்ள கண்ணா’எனும் ஸ்பூனரிசம்! ஆமா பணங்கொட்டோ கொட்டுன்னு கொட்டப்போகுது.. நான் கோணியிலே கட்டோ கட்டுன்னு கட்டப்போறேன்’

இதேமாதிரி நடந்திகிட்டு இருந்தா உன் படத்தில இல்லடா இந்த வீட்டிலேயும் அதான் நடக்கப்போகுது’ செல்லபா டே செல்லபா (செல்லப்பாவில் அந்த ப்’ தனியாக வராது பா’வுடன் இணைந்து ஒலிக்கும் அழகு) ஒரே படத்தில் பாலையா பெரும் நகைச்சுவை நடிகராக மாறிப்போனார். பிறகு வந்த ஹலோ மிஸ்டர் ஜமீந்தார், பாமா விஜயம்..

எல்லாவற்றிலும் முத்திரை பதித்தார், அதிலும் அன்றைய இளம் இயக்குநராக மிளிர்ந்த கே.பாலச்சந்தரின் பாமா விஜயத்தில் நடித்த எத்திராஜ் கேரக்டர் அவரது மைல்கற்களில் ஒன்று, வரவுக்கு மீறி செலவு செய்யும் இன்றைய குடும்பத்திற்கும் எடுத்துக்காட்டாய் சொல்லப்படும் பாடல் இடம் பெற்ற படம்! ‘வரவு எட்டணா செலவு பத்தணா’ என்கிற பாடல்!

நாட்டில் அணா என்னும் ரூபாய் மதிப்பே ஒழிந்து 50 ஆண்டுகள் கடந்தும், இன்றும் நம் மனதில் ஆழமாக அப்பாடல் பதிய அதன் ஓசை நயமும், பாலையா எனும் அற்புதக் கலைஞனின் அசத்தல் நடிப்புமே காரணமாக இருந்திருக்கிறது! அடுத்து பாலையாவின் மறக்கமுடியாத கேரக்டர் திருவிளையாடல் ஹேமநாத பாகவதர் ஏ.பி.நாகராஜனின் கலை பள்ளிக்குள் பாலையா நுழைகிறார்!

ஏற்கனவே அவர் பெரிய தலைமை ஆசிரியர் அல்லவா, அதனால் தான் தலைக்கனம் மிக்க ஹேமநாதர் வேடம்.! நடிகர் கார்த்திக் மெளன ராகம் படத்தில் சிறிது நேரமே வந்தாலும் இன்றும் நம் நினைவில் இருக்கிறாரே அந்த மனோகர் பாத்திரம் போல இந்த ஹேமநாத பாகவதர் பாத்திரம் என்றும் மனதில் நிற்கும், செல்வச் செருக்கு, வித்யா கர்வம்..

தானே உயர்ந்தவன் எனும் அதீத தன்னம்பிக்கை, அலட்சியப்பார்வை என இயக்குநர் APNகேட்ட அத்தனையையும் பாலையா தனது நடிப்பெனும் ஒரே குவளையில் ஊற்றித் தந்து நவரசத்துடன் பரிமளித்திருப்பார், 360 டிகிரியிலும் இந்த கேரக்டரை உள்வாங்கி நடித்திருப்பார், பெரும் நடிகரான அவ்வை டி.கே.சண்முகம் சொல்லுவார்

“ஒரு படத்தில் அந்த காரக்டரில் இவருக்கு பதிலா அவரு நடிச்சிருந்தா நல்லா இருக்கும் என ரசிகன் சொன்னால் அதில் நடித்தவனுக்கு தான் அவமானம்! ஆனால் நம்முடைய பாலையா நடித்த எந்த வேடத்தையும் அப்படிச் சொல்லவே முடியாது என்பார்! ஏனெனில் அவரே பாலையாவின் பெரும் ரசிகர். எங்கே நீங்கள் சொல்லுங்களேன்..

அந்தப்பாத்திரத்தை பாலையாவை விட சிறப்பாக யார் செய்திருக்க முடியுமென்று! முடியாதல்லவா! அதுதான் பாலையா! மன்னரிடத்தில் கர்வம் தொனிக்கும் அதிகாரக் குரலில் சவால் விடுவது, பாண பத்திரரின் மக்கு சீடனே இப்படி பாடுகிறானா எனக் கலங்கி பாண்டிய நாட்டை விட்டு கிளம்பும் போது குரல் தழுதழுத்து பேசுவது என..

குரலிலும் நடிப்பிலும் அவர் காட்டும் வெரைட்டிகள், யார் செய்திருக்க முடியும்! பாலையாவின் மறக்க முடியாத அடுத்த அவதாரம் ‘ஊட்டி வரை உறவு’ வேதாச்சலம் கேரக்டர்! சிவாஜியின் தந்தை! மனைவி இருக்கும் போதே இரண்டாவது மனைவி அவளுக்கு ஒரு பெண், 2வதுமனைவி தான் இறக்கும் போது பாலையாவுக்கு ஒரு கடிதம் எழுதி தன் மகளிடம் தர..

அது இரயிலில் வேறு ஒரு பெண்ணிடம் சிக்கிவிட பிறகு தான் கதையே! (பின்னாளில் சத்யராஜின் நடிகன் படமும் இதே ஸ்டைல் தான்!) கடிதத்தை தவறவிட்ட மகளாக L. விஜயலக்ஷ்மியும் கடிதத்தை எடுத்த பெண்ணாக கே.ஆர்.விஜயாவும் நடித்திருப்பார்கள், சிவாஜி விஜயாவை காதலிப்பார்! (தங்கை உறவு) ஆனால் இப்படத்தின் சுவாரஸ்யமான கதை அமைப்பு..

படம் பார்க்கும் மக்களுக்கு விஜயா பாலையாவின் மகளல்ல எனத்தெரியும், ஆனால் பாலையாவுக்கு அது தெரியாது படம் முழுவதும் பாலையாவின் பரிதவிப்பான நடிப்பில் நகரும், அநாசயமாக நடித்திருப்பார்.! பாலையாவின் அடுத்த காவியம்.. “தில்லானா மோகனாம்பாள்” அதுபற்றி அடுத்தப் பதிவில்..

வரும்.. பார்ட் -1 , 2 & பார்ட் -4 லிங்க் கீழே👇🏿

இப்பதிவின் பார்ட் 1 லிங்க் 👇🏿

https://m.facebook.com/story.php?story_fbid=2758944620954679&id=100005175032887

பார்ட் -2 லிங்க்👇🏿

https://m.facebook.com/story.php?story_fbid=2759697520879389&id=100005175032887

பார்ட் 4 லிங்க் 👇🏿

https://m.facebook.com/story.php?story_fbid=2761244964057978&id=100005175032887

No comments:

Post a Comment