#வெற்றித்_திலகம்
சேப்பாக்கத்தில் நடக்கும் அனைத்து ஃபார்மெட் கிரிக்கெட் போட்டிகளிலும் மறக்க இயலாத ஏதாவது ஒரு வரலாற்றுச் சிறப்பு அமைந்துவிடும். டெஸ்ட், ஒரு நாள் , T20 ஒவ்வொன்றிலும் ஒரு சாதனையை சத்தமின்றி தன் வசம் வைத்திருக்கும் சென்னை சேப்பாக்கின் ‘சிதம்பர’ ரகசியம் இந்த உலகமே அறிந்ததுதான்!
2023 T20 உலகக் கோப்பையுடன் ரோகித், கோஹ்லி அறிவித்த ஓய்வுக்குப் பின் அடுத்த கட்ட வீரர்களை கண்டறியும் சோதனை முயற்சி துவங்கியது. சூர்யகுமார் தலைமையில் கடந்த ஓராண்டாக இந்தியா T20 ஃபார்மெட் கிரிக்கெட்டிற்கு கட்டமைத்து வரும் அணித் தேர்வு மிகச் சிறப்பானது! அது 95% வெற்றி தந்துள்ளது!
இது ஒன்றும் ஆச்சரியமான விஷயம் அல்ல! இந்திய T20 அணிக்கு கிரவுண்டில் பாப்கார்ன் விற்பவரை கேப்டானக போட்டால் கூட இந்தியா வெல்லும் என்னும் அளவுக்கு உலக அளவில் T20யில் நாம் வலுவானவர்கள்! அதிரடிக்கு பெயர் பெற்ற SKY கேப்டன் ஆனபின்பு சிறப்பான அவரது பாணி ஆட்டம் ஏதும் ஆடவில்லை!
ஆனால் தலைமைப் பண்பில் அபாரமாக மிளிர்ந்தார்! வீரர்களுக்கு இடையே இறுக்கத்தைக் களைந்தார். அணியின் வெற்றிக்கு ஒவ்வொருவரின் பங்களிப்பும் முக்கியம் என்பதை உணர வைத்தார் இளைய வீரர்கள் தயக்கமின்றி மூத்த வீரர்களை அணுகும் சூழலை ஏற்படுத்தினார், முக்கியமாக திறமைக்கு முக்கியத்துவமளித்தார்!
தனிமனிதனின் சாதனையை விட ஒரு அணியாக வெல்வதே முக்கியம் என்பதை ஒவ்வொரு வீரருக்குள்ளும் விதைத்தார். அணியின் வெற்றிக்கு யார் வேண்டுமானாலும் தம் கருத்துகளை என்னிடம் கூறலாம் என்னும் சுதந்திரம் அளித்தார். வீரர்கள் ஆடும் ஆட்ட முறைகளில் மாற்றம் பற்றியும் அவர்கள் இறங்கும் டவுனில்..
ஏதும் பிரச்சனை இருந்தால் அதில் செய்யும் மாற்றங்கள் பற்றியும் என்னிடம் யார் வேண்டுமானாலும் தயங்காமல் பேசலாம் என்றார்! அவர் சொன்ன வார்த்தையை நம்பி 4 வது 5வது டவுனில் ஆடிக் கொண்டிருந்த திலக் துணிச்சலாக சென்று ஒன் டவுனில் என்னால் மிகச் சிறப்பாக ஆடமுடியும் அதை எனக்கு தரமுடியுமா என்றார்!
திலக் கேட்ட ஒன் டவுன் சூர்யாவின் டவுனாகும்! கேட்டது எப்படி இருந்தது தெரியுமா? கடையில் எந்தப் பொருள் எடுத்தாலும் 10 ரூபாய்னு சொன்னதும் அப்போ அந்த கல்லா பெட்டியை கொடுங்கன்னு கேட்டது போல! சூர்யாவிற்கு ஈகோவோ தன் இடத்தை விட்டுத் தரமுடியாத பிடிவாதமோ கொஞ்சமும் இல்லை!
அணியின் வெற்றியே முக்கியம் என்பதை நிரூபிக்க அந்த இடத்தை உடனே விட்டுக் கொடுத்தார்! அவர் அணியின் வெற்றிப் பாதையை கட்டமைத்ததிற்கு இது ஒரு சோறு பதம்! இதைத்தான் அவரது சிறந்த தலைமைப் பண்பு என்கிறார்கள் உலகளாவிய கிரிக்கெட் வல்லுநர்கள்! ஒன் டவுனில் திலக் ஆடத் துவங்கினார்..
அதன் பின்பு இப்போது வரை ஆடிய நான்கு ஆட்டங்களிலும் வீழ்த்த முடியாத வீரராக ஆடி வருகிறார் திலக் வர்மா! இந்த 4 ஆட்டங்களில் 2 சதங்கள், ஒரு 50+ ரன்கள் அடங்கும்! T20 ஆட்டங்களில் அதிரடி தான் அடி நாதமே என்றாலும் நேற்றைய திலக்கின் ஆட்டம் அடக்கி வாசித்த அதிரடி என்று சொல்லலாம்!
வெற்றிக்கு அருகில் இருந்த போது சுழலுக்கு சாதகமான பிட்சில் அடில் ரஷீத்தின் 4 டாட் பால்களை அவர் ஆடிய போது இன்றைய T20 ரசிகர்களின் பார்வையில் 4 பந்துகளை வீணடித்துவிட்டான் என்றே எரிச்சல் வந்திருக்கும்! ஆனால் பதுங்க வேண்டிய இடத்தில் பதுங்கி பாய வேண்டிய நேரத்தில் பாய்வதே சிறந்தது!
அவர்கள் தான் சிறந்த கேம் ஃபினிஷர்களாக உருவாகி வருவார்கள் அப்படி ஒரு கேம்ஃபினிஷர் தான் இன்று இந்திய அணிக்கு தேவை! அதை கடந்த ஓராண்டுக்குப் பின் கண்டடைந்துள்ளோம்! இனி திலக் மீதான கேப்டனின் நம்பிக்கை விரிவடையும்! பல்வாள் தேவனுக்கு அமைந்த பாகுபலி போல ஒரு வீரர் தான் திலக்வர்மா!
ஆக்ரோஷமாக மோதிக் கொண்டுள்ள களத்தில் எதிரி பொது மக்களை பிணையாக கொண்டு வந்து நிறுத்தும் போது தன் நாட்டு மக்கள் தாக்கப்படக் கூடாது என அதிரடியை நிறுத்திய அக்கறை, துல்லிய திட்டமிடல், சிறந்த தந்திரங்கள், வாய்பேசாது களத்தில் பதிலடி! இது பாகுபலிக்கு மட்டுமல்ல திலக்கிற்கும் பொருந்தும்!
நேற்றைய ஆட்டத்தில் ஆர்ச்சரின் பவுன்சரில் எட்ஜாகி ஆர்ச் போல பின்னோக்கி போனது ஒரு சிக்ஸர்! நல்லா காட்டு சுத்து சுத்து என்பது போல ஆர்ச்சர் கேலியான முகபாவனை காட்ட அதை பார்த்து அடுத்த பந்தை ஸ்டெம்பை விட்டு விலகி ஆஃப் சைடில் ஒரு சிக்ஸர் அடிப்பார்! பதிலடிக்கு அது ஒன்றே உதாரணம்!
22 வயதில் இப்படிப்பட்ட நிதானமான அதே நேரத்தில்,வெற்றி வேட்கையுடன் விக்கெட்டை இழக்காமல் ஆடும் வீரர் இந்திய அணிக்கு கிடைத்திருக்கிறார்! இந்த ஒரு மேட்ச் வைத்து பில்டப் பண்ணாதிங்க என்கிறீர்களா? இல்லை! இது இவருக்கு இந்திய மண்ணில் முதல் 50+ இவர் மீது எதிர்பார்ப்பு எகிறி இருக்கும்!
இந்தத் தருணங்கள் அவர் மனதில் நீங்காத நினைவுகளாக இருக்கும்! அதை அவர் மனதில் கொண்டு தொடர்ந்து நிலையாக ஆடும் உத்வேகமளிக்கும்! இந்தியாவிற்கு ஒரு சிறந்த கேம் ஃபினிஷர் நேற்று அடையாளம் காணப்பட்டார் என்று கூட சொல்லலாம். இவர் மீதே சுமையை திணிக்காமல் மற்ற வீரர்கள்..
தங்கள் ஆட்டத் திறனை வளர்த்துக் கொள்வது, இவருக்கு பக்க பலமாக நிற்பது போன்றவற்றை உடனிருந்து செய்தாலே போதும் இந்திய அணி இன்னும் பல வெற்றிகளைப் பெறும்! T20யில் இந்திய அணியின் வெற்றித் திருமுகத்தின் நெற்றியிலிட்ட திலகம் தான் திலக்! இந்தத் திலகம் இந்தியாவின் வெற்றித் திலகமே!
No comments:
Post a Comment