Thursday, 30 January 2025

🐴 குதிரை வண்டி 🦄

#குதிரை_வண்டி 




அறிவியலும், விஞ்ஞானமும் வளர வளர நம்முடன் இருந்த பல விஷயங்கள் அடியோடு மாறியிருக்கும்! அல்லது வழக்கொழிந்து போயிருக்கும்! கையால் கடைப் பெயர்ப் பலகைகள் வரையும் ஓவியங்கள் எனும் தொழில் ஃபிளக்ஸ் ஃபேனர் வந்த பின்பு முற்றிலும் மாறியது ஒரு உதாரணம்! தூத்துக்குடி சாந்தா ஆர்ட்ஸ் கையால் வரைந்த போர்டுகளெல்லாம் அப்படியே தத்ரூபமாக புகைப்படம் போலவே இருக்கும்! 


இப்போது அப்படி வரையும் ஆட்களில்லை என்பதை விட அதற்கு நேரமில்லை! காலை 9 மணிக்கு டிஸைன் செய்ய ஆரம்பித்து 10 மணிக்கு பிரிண்டிங் போய் 11 மணிக்கு கடையில் போர்டு மாட்டப்பட்டுவிடும்! ஆனால் கையால் வரைவது அப்படியல்ல குறைந்தது 1 வாரம் 10 நாட்கள் தேவைப்படும்! இப்படி காலத்தில் கரைந்தது தான் குதிரை வண்டியும்! கிட்டத்தட்ட 150 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் மிக்கது! 


இந்தியாவில் பொது மக்கள் பயணத்திற்கு 1880களில் துவங்கிய குதிரை வண்டியின் பாரம்பரியம் 1990 வரை நல்ல உயிர்ப்புடன் இருந்தது! மோட்டார் வாகனங்களின் புழக்கத்துக்கு பின்பு சிறிது குறைந்து, வாடகை டாக்ஸி வந்தபின் மேலும் குறைந்து ஆட்டோ வந்த பின்பு அடியோடு குறைந்து போனவை தான் இந்தக் குதிரை வண்டிகள். 70களில் பஸ் / ரயில் நிலையங்களின் வாயிலில் குதிரை வண்டி ஸ்டாண்ட்டுகளை பார்க்கலாம்.


வைக்கோல், பசும்புல் வாசனை, குதிரைச் சாணம் எல்லாம் கலந்து அந்த மணத்திலேயே ஸ்டாண்ட் இருக்கும் இடத்தை தெரிவிக்கும்! குதிரையின் கண் பட்டை, அதன் முதுகில் கட்டும் தோலால் ஆன சேணம், கடிவாள பெல்டுகள் எல்லாம் அங்கு மாட்டியிருக்கும்! சில இடங்களில் கழுகின் குரலை மிமிக்ரி செய்து குதிரைகள் கனைக்கும் ஒலியும் கேட்கும்! சிமெண்ட் தொட்டிகளில் நீர் இருக்கும், புட்டபர்த்தி சாய்பாபா தலை முடி போல..


பரந்த கோரைப் புற்கள், கட்டுக் கட்டாக வைக்கோல்கள், கொள்ளு, தவிடு மூட்டைகள், லாந்தர் விளக்குகள், சாட்டைக் கம்புகள், பழுதடைந்த குதிரை வண்டிச் சக்கரங்கள், சக்கரத்தை சுற்றியடித்து பழுதடைந்த கழண்டு போன இரும்பு ரிம்கள் எனக் குவிந்திருக்கும்! வண்டிக்காரர்கள் அதை லாயம் என்பார்கள்! குதிரைகளை கட்ட கல்லால் ஆன கம்பங்கள் இருக்கும்! இரவில் வண்டியை கழட்டி சாய்த்து வைத்துவிடுவார்கள்.


குதிரை வண்டி முன் பக்கம் ஒற்றை மாட்டுவண்டி போலவே இருக்கும்! நுகத்தடியில் குதிரையைப் பூட்டியிருப்பார்கள்! பின் பக்கம் வில் போல வளைந்த கூண்டு போன்ற வண்டி அப்படியே எஸ்கிமோக்களின் இக்ளூ வடிவில் இருக்கும்! உள்ளே 3 நபர்கள் தாராளமாகவும் 5 நபர்கள் நெருக்கியும் அமரலாம். நாம் வண்டி ஏறும் போது வண்டிக்காரர் முன்புறம் அமர்ந்தும், இறங்கும் போது குதிரைக்கு அருகேயும் நின்று பேலன்ஸ் செய்வார்!


வண்டியில் அமரும் பகுதியில் புற்கள் அல்லது வைக்கோல் போட்டு மேலே கோணி விரித்திருப்பார்கள்! மெத்துனு உட்காரலாம் என்றாலும் சிறிது நேரத்தில் பின்னால் புல் குத்தும்! வண்டியில் ஒவ்வொருவராக ஏற வேண்டும் குதிரை வண்டிக்காரர் முன்புறம் அமர்ந்து முன்னால வாங்க முன்னால வாங்கன்னு நாம் முன்னேற வரவேற்பார்! வண்டியின் பின்புறம் கால் வைத்து ஏற கீழே படி போல (Foot ரெஸ்ட்) சதுர பலகை இருக்கும்! 


அதில் கால் வைத்து ஏறவேண்டும்! வண்டிக்கு முன்னே பக்க வாட்டில் கால் வைத்து ஏற இதே போல ஒரு சிறு பலகையும் உண்டு! இளைஞர்கள் சற்று பெரிய சிறுவர்கள் ஏறலாம். குதிரை வண்டிப் பயணம் ஸ்லோ சைக்கில் ரேஸ் போல ஆனால் குதுகலமாக இருக்கும்! முன்பக்கம் வண்டிக்காரருடன் அமரும் போது கால்களை கீழே தொங்கவிட முடியாது! குதிரையின் பின் பகுதி நம் கால்களிலும் உரசும். வண்டிக்காரர் சாட்டைக்கம்பு வைத்திருப்பார்.


குதிரையை விரட்ட அதனை சுழட்டுவார்! அவ்வப்போது அந்த சாட்டை நம்மையும் தீண்டும்! சில நேரம் குதிரை நகராது முன்னும் பின்னும் இழுக்கும் அப்போது சுளீர் சுளீர்னு நம்ம ‘அண்ணா’ போல குதிரை மீது சாட்டையை சுழற்றுவார்! சில நேரங்களில் குதிரைகளுக்கு அது வலிக்காமல் இன்னும் நல்லா அடி என்பது போல நிற்கும்! சில நேரம் வேகமெடுத்து ஓடும்! பயணங்களில் குதிரை வண்டி நன்கு குலுங்கும் என்பதால்..


நீண்ட தூர குதிரை வண்டிப் பயணம்  உடல் வலியைத்தரும்! நகரத்தை விட்டு சற்று வெளியே வந்துவிட்டால் வண்டிக்காரர் சாட்டைக் கம்பை வண்டி சக்கரத்தின் ஊடே வைக்க டக டக டகவென எழும்பும் ஒலி கேட்டு அதிர்ந்து குதிரை வேகமாக ஓடும்! அவ்வப்போது ஹை, ஹை, டுர், டுர்ரா, என வண்டிக்காரர் எழுப்பும் ஒலி தான் ஆக்ஸிலேட்டர்! வண்டிக்காரர் ஓரமா போ, வழிவிடு சார் என கத்துவதும் டகடக ஒலியும் தான் குதிரை வண்டியின் ஹாரன்! 


குதிரை வண்டிகளுக்கு ரிப்பேர் பார்க்கும் கொல்லன் பட்டறைகள், குதிரைகளுக்கு லாடம் அடிக்கும் இடம், புல், வைக்கோல் விற்கும் இடம் போன்றவை இருக்கும்! இன்று நாம் பயணம் செய்யும் ஆட்டோ பெட்ரோல் பங்க் போவது போல அன்றைக்கு புல் வாங்குமிடம், லாடம் அடிக்குமிடம் என்று வண்டியை நிறுத்துவதும் உண்டு! நிற்கும் குதிரைக்கு லாடம் அடிப்பதை எல்லாம் இன்றைய கிட்ஸ் பார்த்திருக்க மாட்டார்கள்! 


குதிரை வண்டியில் எல்லாரும் அமர்ந்ததும் பின்புறம் செக்போஸ்ட்டில் குறுக்கே உயர்த்தும் கம்பு போல ஒரு முனையில் கொக்கி போல வளைந்த கம்பி இருக்கும். அந்த கொக்கியை எதிர் முனையில் உள்ள வளையத்தினுள் லாக் செய்துவிட்டால். யாரும் விழ மாட்டார்கள்! அதைப்பிடித்துக் கொண்டே பாதுகாப்பாக பயணம் செய்யலாம்! சில வண்டிகளின் முன்னும் பின்னும் படுதாக்கள் இருக்கும்! மழையிலிருந்து நம்மை   காக்க! 


குதிரை வண்டிக்கு வாடகை 50 பைசா 75 பைசான்னு கேட்பாங்க  டவுனில் இருந்து வீடு வர 5 பேருக்கு அதிக பட்சம் 1.25 ரூபாய் தான் ஆகும். வண்டி அடியில் வயிற்றுப் பகுதியில் சாக்குப் பை கட்டி அதில் வைக்கோல் புல்லை லோடு செய்திருப்பார்கள். அங்கு ஒரு இரும்பு வாளியும் தொங்கும்! வீட்டில் நம்மை இறக்கிவிட்ட பின்பு கொஞ்சம் குதிரைக்கு தண்ணீர் கிடைக்குமான்னு பணிவா கேட்பாங்க அதுக்குதான் அந்த இரும்பு வாளி!


மனுசன் குடிக்கிற தண்ணியே காசுக்கு விற்குற காலம் இது! ஆனா அன்னிக்கு குதிரைக்கெல்லாம் தண்ணி தரும் அளவு நம்மிடம் நிறைய தண்ணீர் வசதியும் இருந்தது நல்ல மனசும் இருந்துச்சு! குதிரைகளை சாட்டையால் அடிச்சா கூட பாவம் அடிக்காதிங்கனு அன்பு காட்டின நம்ம மக்கள் இன்னிக்கு நடுரோட்டில் மனுசனை அடிச்சாகூட நின்னு மொபைலில் படம் எடுத்துகிட்டு இருக்காங்க! எங்க போச்சு அந்த மனித நேயம்?! ஆச்சரியமா இருக்கு! 


மக்கள் விலங்குகளை தம்முடனே வளர்த்த போது இருந்த அன்பும், அக்கறையும் இந்த அறிவியல் காலத்துல குறைஞ்சிருக்கு! குதிரை வண்டி, மாட்டு வண்டி எல்லாம் காலத்தால் அழியாதவை? இன்னும் தமிழ்நாட்டில் குதிரை வண்டிகள் பயன்பாட்டில் இருக்குற ஊரு பழனி! இன்றும் அங்க குதிரை வண்டி ஸ்டாண்ட் கூட பார்க்கலாம்! என்ன தான் வழக்கொழிஞ்ச விஷயம்னு இருந்தாலும் சில சாகாவரம் பெற்ற விஷயங்களும் இருக்குன்னு சொல்லுவாங்க..


ஆமா! அதில் இந்தக் குதிரை வண்டியும் ஒண்ணு 🐴 

No comments:

Post a Comment