“பரிவட்டச் சோறு”
(சோறு + நெய் + சாம்பார்)
சுடு சோற்றில் நெய் விட்டு அதில் சாம்பார் ஊற்றிப் பிசைந்து சாப்பிடும் எல்லா சாம்பாருமே ருசியானதாக இருந்திட முடியாது! சாம்பாரின் தரம், பக்குவமான தயாரிப்பு, நேர்த்தியான சமையல் முறை இவை எல்லாம் தான் ஒரு அற்புதச் சாம்பாருக்கு அடிப்படை தேவைகளாகும். அடுத்ததாக வெந்த சோறு! குழைவாக இன்றி பதமாக வடித்திருக்கும் பொல பொலவென்ற சோறே சிறந்தது!
ஒரு விருந்தில் பருப்பு மட்டும் இடம் பெறாவிட்டால் முதல் மரியாதை பரிவட்டம் எல்லாம் எப்போதும் சாம்பாருக்குத் தான்! விருந்துகளில் சோற்றுடன் ஓபனிங் பேட்ஸ்மேனாக இறங்கும் சாம்பார் எப்போதும் ஷேவாக் போல! இந்தச் சாம்பாரின் ஸ்டிரைக் ரேட் கன்ஸிஸ்டன்சி அதிரடியானது, அபாரமானது! கொத்தமல்லித் தழை மண மணக்க சாம்பாரின் பிரத்யேக வாசனை நாசியில் நுகர்ந்தாலே போதும்!
அந்த சாம்பாரை ருசிக்கும் ஆவல் வந்துவிடும்! முருங்கை, கத்திரி, காரட், பூசணி, செள செள, புடலங்காய், அவரை, பீர்க்கங்காய், வெண்டை, மாங்காய், வெங்காயம், என சாம்பார் வகைகளின் லிஸ்ட் பெருசு! பருப்புடன் சேர்த்து சாம்பாராகவோ அல்லது அரைத்துவிட்ட சாம்பாராகவோ அல்லது பொரித்த குழம்பாகவோ சாம்பாரின் தோற்றங்கள் பல உண்டு! அதில் பல ஏற்றங்களும் உண்டு!
ஏமாற்றங்களும் உண்டு! சின்ன வெங்காயம், சிவப்பு பூசணி சேர்த்து செய்யும் சாம்பார் சில சமயம் அதில் வெல்லம் போட்டு விட்டால் இனிப்பு குறைந்த பாயாசம் போல ஆகிவிடும்! செள செள, முள்ளங்கி, சுரைக்காய், வெண் பூசணி காய்களில் செய்யும் சாம்பார்கள் நீர்த்து வெள்ளமெனப் பாயும்! முருங்கை, கத்திரி, காரட், அவரைக்காய்களில் செய்யும் சாம்பார்கள் கிண்ணென கிண்ணத்தில் அமர்ந்திருக்கும்.
குழைவாக வெந்த பருப்பு, தக்காளி, வெங்காயம், மிளகாய், உள்ளிட்ட காய்கறிகளின் தன்மைக்கேற்ற பக்குவமான வேக்காடு, பொடிகளின் சரியான கலவை, உப்பு, காரம், புளிப்பு, தேவைக்கு தேங்காய் பால் இப்படி பார்த்துப் பார்த்து செய்தால் சாம்பார் போல ஒரு உணவுக்கு நிகரில்லை! சூடான சாதத்தில் சூடாக உருக்கிய நெய்யை 2 டீஸ்பூன் ஊற்றி பருப்புடன் காய்கறிகளும் வரும் படி 2 கரண்டி சாம்பாரை..
சோற்றின் மீது அபிஷேகம் போல விட்டு அதை கை பொறுக்கும் சூட்டில் அழுத்தாமல் பிரட்டி பிசைந்து, ஒரு பொரிச்ச கூட்டு, முட்டை கோஸ் பொரியல், உருளை/வாழை காரக்கறி, பொரித்த அப்பளம் அல்லது உசிலி, தக்காளி கூட்டு, பால் கூட்டு, அவியல், சேனை வருவல்னு இப்படி ஏராளமான தொடுகறிகளோடு சாப்பிடுவது பேரின்பம். அதிலும் இளசான அவரைக்காய் போட்டு செய்த..
கமகம வெங்காய சாம்பாருடன் காரட் & பீன்ஸ் பொரியல், புடலங்காய் பருப்புக் கூட்டு வைத்து சாப்பிடுவது திவ்யம் எனப்படும். ஒரு ஸ்பூன் மாங்காய் தொக்கு, கூட 4 அரிசி வடகம் இருந்தால் அடடா! முள்ளங்கி சாம்பாருக்கு வெங்காய வடகம், உருளைக்கிழங்கு கூட்டு அப்படி ஒரு காம்போவாகும். கிராமங்களில் கதம்பம் என எல்லா காய்கறிகளோடு பலாக் கொட்டை, காராமணி, மொச்சை..
எல்லாம் போட்டு ஒரு சாம்பார் வைப்பாங்க பாருங்க! வெறும் அப்பளம் போதும். சாம்பாருக்கு டாங்கர் பச்சடி ஒரு சிறந்த பச்சடியாகும். சாம்பாரின் நிறத்தால் மயங்கி முழு விருந்திலும் சாம்பார் மட்டுமே கேட்டு வாங்கிச் சாப்பிட்டவர்களில் நானும் ஒருவன். அவ்வப்போது ஆம்லெட், முட்டை பொடிமாஸ், சிக்கன் என அசைவ காம்போ போனாலும் எக் பெப்பர் ஃப்ரை தேவா எனும் சாம்பாருக்கு..
சூர்யா போல அருமையான தோழன். சாம்பாருக்கு மீன் உணவு எனில் விரால் மீன், வாவல் மீன், வஞ்சிரம், பாறை போன்ற நீர்த்துவிடாத நீர் நண்பர்கள் நிறைய. பெப்பர் மூளை ரோஸ்ட்டோடு சாம்பார் சோறு சாப்பிடுவது, சில்லி சிக்கனுடன் சாப்பிடுவது என பல ரகளையான அனுபவங்கள் எனக்குண்டு! தூத்துக்குடியில் பெப்பர் கணவாய் மீன் வறுவலுடன் சாப்பிட்ட முருங்கைக்காய் சாம்பார் எனக்கு..
கோமாவே வந்தாலும் நினைவில் இருக்கும்! ஓட்டலின் சாம்பாரை வைத்து அந்த மொத்தக்கடையின் ஜாதகத்தையே சொல்வார் என் அப்பா! ஆம் உணவு விருந்துத் திருவிழா எங்கு நடந்தாலும் பந்தியில் தலைமகன் சாம்பார் தான். அவனுக்கு தான் அந்த பரிவட்டம் கம்பீரமான சொந்தமாகும்! அதுவே நம் பந்தமாகும்!
ஏவ்வ்வ்வ்வ்வ்…
No comments:
Post a Comment