#வேலண்டைன்_டே
சங்க காலத்தில் குறிஞ்சி நிலத்தில் வேழமலை என்ற மலை நாட்டில் ஒரு வேலவன் கோவில் அமைந்திருந்தது. அம்மலையின் அரசன் தான் சீர்வேலன்! கூர்வேல் கொண்டு பகையறுக்கும் சீர்வேலன் என்று அவனை கபிலர் மட்டுமல்ல வேம்புலியும் பாடிய பெருமையுடையவன்! ஒரு முறை காட்டுக்குள் அவன் வேட்டைக்கு சென்ற போது ஒரு இளம் ஜோடிகள் ரத்த காயத்துடன் விழுந்து கிடந்ததைப் பார்த்தான்!
உடனே அவர்களை மீட்டு விசாரிக்க அது மலைக்கு கீழே உள்ள தேசத்து மன்னனின் மகன் என்றும் அந்தப் பெண் அவனது காதலி ஆனால் ராஜ குலம் அல்ல என்பதும் தெரிந்தது! நாடாளும் மன்னர் மகன் என்று தெரிந்தும் அஞ்சாமல் சீர்வேலன் அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைத்து பகைவர்கள் எளிதில் நெருங்க முடியாத வேழமலையின் உச்சியில் அவர்களை குடியமர்த்தினான்!
மகனின் திருமணத்தைப் பற்றி அறிந்ததும் சினத்துடன் மலையை நோக்கி படையெடுத்து வந்த மன்னனின் படையை மலை மீதிருந்து சமயோஜிதமாக அம்புகள் எய்தி, மலைப் பாம்பு, உடும்புகளை வீசி, பெரிய பாறைகளை உருட்டி விட்டு கதறி சிதறி ஓடச் செய்தான் வேலன்! இந்தச் செய்தி உலகம் முழுவதும் அமெரிக்க காட்டுத்தீ போல பரவ காதலர்கள் எல்லாம் வேழமலை நோக்கி குவிந்தனர்!
வேலனும் வந்த ஜோடிகளை தீர விசாரித்து மெய்யான காதலர்களை மட்டும் அங்கே அனுமதிப்பான்! பின்னர் அவர்களுக்கு உடும்புக்கறி சமைத்து கறிக் களி உருண்டை செய்து (களிக்குள் கறி) விருந்து பரிமாறி அவர்களை வேழமலை உச்சிக்கு குடியேற அனுப்புவான்! அந்த வேழமலை முழுவதும் காதலர்களின் மலையானது! அங்கு காதலர்கள் பெருகியது போல வேலனுக்கு எதிரிகளும் பெருகினர்.
ஆனால் கீழிருந்து மலைமீது படையெடுத்து வேலனை வெல்வது மாமன்னர்களாலேயே முடியாமல் போன வரலாறு இருந்தது! வேலனை வஞ்சகத்தால் வீழ்த்த நினைத்தனர்! அவர்களே முழு பயிற்சி தந்து ஒரு போலியான காதல் ஜோடியை அவனிடம் அனுப்ப வேலனும் அவர்களை வரவேற்று அவர்களுக்கு திருமணமும் நடத்தி மலை உச்சிக்கு அனுப்ப.. அந்தத் திருமணத்தின் மறுநாள் அந்த ஜோடி..
அண்ணே 8 வகையான காடை, போன்லெஸ் கவுதாரி, காட்டுக் கோழி வருவல், காட்டாற்று கெண்டை மீன் குழம்பு, திணை, தேன், எல்லாம் உங்களுக்காவே நாங்க சமைச்சிருக்கோம் என்று வேலனை தங்கள் வீட்டில் விருந்துக்கு அழைத்தனர்! என்னடா இந்த ஆட்டம் புதுசா இருக்கேன்னு உணராது அந்த ஜோடியின் வீட்டுக்கு சென்ற வேலனை அந்த ஜோடி உணவில் நஞ்சை கலந்து கொடுத்து கொன்றனர்!
அங்கு குடியேறி இருந்த மற்ற ஜோடியினர் இதை கண்டறிந்ததும் துரோகம் செய்த இருவரையும் மலையில் இருந்து தள்ளி கொன்றனர்! காதலர்களை சேர்த்து வைக்க தன் வாழ்வையே தியாகம் செய்த வேலனின் இறந்த நாளை காதலர் தினமாக கொண்டாட அங்கிருந்த அனைவரும் முடிவெடுத்து கொண்டாட ஆரம்பித்தனர்! இந்த நாளை அவர்கள் வேலன் டே என்று கொண்டாடி வந்தனர்! பின்னாளில்..
நம் நாட்டில் ஆங்கிலேயர் ஆதிக்கம் வந்தபிறகு அந்த வேலன் டே தான் வேலண்டைன் டே என்று மாறியது!
இதெல்லாம் நம்மில் எத்தினி பேருக்கு…
💖💖 வாழ்க காதல் 💚💚 வாழ்க தமிழ் மாமன்னன் சீர்வேலன் 💖💖
No comments:
Post a Comment