“சுண்டங்கோட்டை சூரர்” {பார்ட் -1}
திருநெல்வேலி, சுப்பிரமணியம் பாலையா என்கிற TSபாலையா ஒரு பேரற்புத ஆற்றல் மிக்க கலைஞன்! தமிழ் சினிமாவில் பல சாதனைகளை சத்தம் இல்லாமல் செய்த நிகரில்லா நடிகன்.! இன்றைய தூத்துக்குடி மாவட்டமான சுண்டங்கோட்டை தான் இவர் சொந்த ஊர். பாலையா பிறந்தது 1914 ஆம் ஆண்டில் அப்போது சினிமா பேச ஆரம்பிக்கவில்லை மவுனப்படங்கள் தான் வெளிவந்தன.
பாலையாவின் காதல் சினிமா மீதல்ல! அவர் காதலித்தது சர்க்கஸை! முதன் முதலாக அவர் பார்த்த சர்க்கஸ் கலைஞர்கள் நிகழ்த்திய சாகசங்கள் அவரை சர்க்கஸ் மீது காதல் கொள்ளவைத்தது! அந்த கலைஞர்களுக்கு கிடைத்த கைத்தட்டலும் பாராட்டும் அவருக்கு ஒரு போதையை தந்தது! மணந்தால் மகாதேவி போல இணைந்தால் சர்க்கஸ் என்பது அவரது இளமனதில் விதையாக விழுந்தது.
நாளடைவில் அது ஆலமரமாக வளர்ந்து விழுதுகள் விட்டு பரந்து விரிந்து எழுந்து நின்றது. அவரது தீராத சர்க்கஸ் மோகத்தை தெரிந்து கொண்ட ஒருவன் அவருக்கு சர்க்கஸ் ஆசையை மேலும் தூண்டி மானாமதுரையில் நமக்கு தெரிந்த சர்க்கஸ் கம்பெனியிருக்கு என எனக்கு ஐஜியை தெரியும் பாணியில் அடித்துவிட நம்பி வீட்டில் இருந்து பணத்தை எடுத்துக் கொண்டு அவனுடன் கிளம்பினார்.
மானாமதுரைக்கு ரயிலில் வந்து இரவு ரயில்வே ஸ்டேஷனிலேயே தூங்கிவிட்டனர். விடிந்த போது வானில் வெளிச்சம் தோன்றியது, அந்த ஃபிராடு பணத்தோடு மறைந்துவிட்டான். ஏமாற்றத்தோடு கலங்கிய பாலையா அங்கே ஒரு உணவகத்தில் வேலைக்கு சேர்ந்தார். பிறகு ஒரு கறிக்கடையில் பணி! தன் ரத்தத்திலும் சதையிலும் சர்க்கஸ் ஆசை ஊறிக் கிடக்க.. ரத்தத்தையும் சதையையும் விற்கும் கறிக் கடையில் அவர் வேலை பார்த்தது தான் பெரும் சோகம்.
அப்போது தற்செயலாக மதுரை ஒரிஜினல் பாய்ஸ் நாடகக் குழுவின் நாடகத்தை பார்த்த பாலையாவின் மனம் என்னும் மங்கி.. சர்க்கஸ் ஆசையிலிருந்து நடிப்புக்கு தாவியது! ஏதோ ஒரு துறை ஆனால் அந்தக் கைத்தட்டலும், புகழும், பணமும் அவர் சம்பாதிக்க ஆசைப்பட்டார், பாய்ஸ் கம்பெனியில் சேர்ந்தார்! சிறிது காலத்திலேயே திமுகவில் இருந்து பிரிந்து அதிமுக ஆரம்பித்தது போல பாய்ஸ் கம்பெனி தனியாகப் பிரிந்தது.
பால மோஹன சபா என்னும் அதில் நடித்தவர்கள் அனைவருமே 15 வயதிற்கு உட்பட்டவர்களே. தமிழகத்தின் அன்றைய ஸ்டார் நடிகர்களில் ஒருவரான MKராதா அவர்களின் தந்தை கந்தசாமி முதலியார் அவர்களால் துவங்கப்பட்ட நாடகக் குழு இது. எம்.ஜி.ஆர், சிவாஜி, கலைவாணர், பாலையா, தங்கவேலு, எம்.ஆர்.ராதா போன்றவர்களை அறிமுகம் செய்தது கந்தசாமி முதலியார் தான்! அவருக்கு மிகப்பிடித்த நடிகரானார் பாலையா!
அப்போது அவர்கள் நடித்த பதிபக்தி என்னும் நாடகம் சூப்பர் டூப்பர் ஹிட்! கிட்டத்தட்ட அதே போல ஒரு கதை அன்றைய ஆனந்த விகடனில் தொடராக வந்து கொண்டிருந்தது. இரண்டும் ஒரே கதை என்பதை விட இரு கதையின் நாயகிகள் பெயரும் லீலாவதி! அந்தக் கதையை படமாக்க விரும்ப பதிபக்தி நாடகத்தில் நடித்த அதே வேடம் சினிமாவிலும் பாலையாவிற்கு கிடைத்தது.!
அந்தப்படம் தான் சதி லீலாவதி! ஆம் MGRக்கு மட்டுமல்ல பாலையா, NSK, தங்கவேலு மற்றும் அப்படத்தின் ஹீரோவான MKராதாவுக்கும் சதிலீலாவதி தான் முதல் படம்! இயக்கியவர் எல்லீஸ் ஆர்.டங்கன் எனும் அமெரிக்க இயக்குநர். முதல் படத்திலேயே வில்லனாக அறிமுகம் ஆனார்! பின்னாளில் பல சூப்பர் ஸ்டார்கள் வந்த இவ்வழிக்கு பிள்ளையார் சுழி பாலையா போட்டது!
அதன் பிறகு பாலையா நடித்தது இரு சகோதரர்கள் இதையும் எல்லிஸ் ஆர். டங்கனே இயக்கினார். 1937 பாலையாவிற்கு மறக்கமுடியாத ஆண்டு, ஆம் அன்றைய மெகா சூப்பர் ஸ்டாரான தியாகராஜ பாகவதருக்கு வில்லனாக அம்பிகாபதி படத்தில் நடித்தார்! இதுவும் டங்கன் இயக்கமே, தமிழகம் முழுவதும் பாலையா புகழ் பரவ அன்றைய அடுத்த சூப்பர் ஸ்டாரான PUசின்னப்பா நடித்த உத்தமபுத்திரன் படத்திலும் இவரே வில்லன்!
ரஜினி, கமல் இருவருக்கும் வில்லனாக நடித்த சத்யராஜ் போல பெரும் புகழ் அடைந்தார் பாலையா! ஆம் சத்யராஜுக்கும் முன்னோடி இவர் தான்! பம்பாய் மெயில், பூலோக ரம்பை, ஆர்யமாலா, பிருதிவி ராஜன், மனோன்மணி, ஜகதலப்பிரதாபன், சாலி வாஹனன், பர்மா ராணி, மீரா முதலிய படங்களில் எல்லாம் அவர் நடித்த முக்கியமான அன்றைய ஹிட் படங்களின் வரிசையாகும். புகழ்பெற்ற வில்லன் கதாநாயகன் ஆன வரலாற்றையும் பாலையாவே துவக்கி வைத்தார்.
ஆம் அவர் கதாநாயகனாக நடித்தபடம் சித்ரா! 1946 இல் வெளியானது! அதன் பிறகு மீண்டும் வில்லனாக வால்மீகியில் நடித்துவிட்டு 1947இல் மீண்டும் கதாநாயகனாக செண்பகவல்லியில் நடித்தார்! கிட்டத்தட்ட இன்றைய விஜய் சேதுபதி பாணி, இதையும் சினிமாவில் துவக்கியவர் பாலையா தான்.! அட எல்லாம் விடுங்கள் MGR என்றால் உங்களுக்கு வில்லன் நம்பியார் தான் நினைவுக்கு வருவார் ஆனால் MGR ஹீரோவான முதல்படம் ராஜகுமாரியில் பாலையா தான் வில்லன்!
அவரே வில்லன், அவரே ஹீரோ, பிறகு வில்லன், தமிழகத்தின் மெகா ஸ்டார்களின் படத்தில் எல்லாம் வில்லன் என பல படங்கள், நிறைய பணம், பேர், புகழ் பாராட்டுகள் என சிறுவயதில் ஏங்கிய அனைத்தையும் பெற்றார் பாலையா! அவர் ஹீரோவாக நடித்தாரே சித்ரா என்னும் படம் அதில் நடித்த கதையே ஒரு சுவாரஸ்யம்! ஆம் அன்று திடீரென பாலையா சாமியாராகி காணாமல் போய்விட்டார்.! அவரைத் தேடிப் பிடித்து கொண்டு வந்தது யார் தெரியுமா?
வரும்..
No comments:
Post a Comment