#வள்ளியூர்_ருசி
25 வருடங்களுக்கு மேல் இருக்கும்! பணி நிமித்தமாக நாகர் கோவில் போகும் போதெல்லாம் வள்ளியூர் வழியாகத் தான் போக வேண்டும்! நான்கு வழிச்சாலை இல்லாத காலம் அது. அப்போது என் நண்பர் ஒருவர் அறிமுகப்படுத்திய கடை தான் வள்ளியூர் “பகவதி டீ ஸ்டால்”
2 ரூபாய்க்கு சூடான மெதுவடையும் அபாரமான தேங்காய் சட்னியும், 3 ரூபாய்க்கு நாவில் ஒட்டிக் கொள்ளும் ருசியில் அருமையான டீயும் மொத்தமே 5ரூபாய்! அடுத்த 2மணிநேரத்துக்கு பசிக்கவே பசிக்காது என்பதற்கு நான் கியாரண்டி!
பகவதியில் பலகாரங்கள், காபி, டீ, பால் வகைகளில் ஒரு தனித்துவம் இருக்கும்! ருசியும் தரமும் அருமையாக இருக்கும். கடந்த ஆண்டு நாகர்கோவில் செல்லும் வழியில் 25 ஆண்டுகளுக்கு முன் சுவைத்த பகவதி டீ ஸ்டாலின் ருசியை என் நாக்கு அதன் டைரியைப் பார்த்து எனக்கு நினைவூட்ட..
வண்டியை ஹைவேயில் இருந்து ‘எலே பசுபதி வண்டிய ஊருக்குள்ள விட்றான்னு டிரைவரிடம் நாட்டாமினேன்’ வண்டியும் ஊருக்குள் நுழைந்து வள்ளியூர் கோர்ட் எதிரே உள்ள சாந்தி ஓட்டல் பக்கத்தில் தன் கம்பீரம் குறையாது நின்றது பகவதி டீ ஸ்டால்!
காலம் மாறியதற்கு ஏற்ப ஒரு 20 சதவீத அடையாளம் தான் மாறி இருந்தது! மற்றபடி அதே தோற்றம் தான்! இந்த பாலிதீன் பேப்பர் காலத்திலும் அழகான இளம்பச்சை நிறத்து வாழையிலை வைத்து சட்னியுடன் சூடாக வடைகளை பரிமாறிக் கொண்டிருந்தனர்.
அன்று வடை 6 ரூபாய் டீ 8 ரூபாய்! வடை மட்டுமல்ல வெங்காய போண்டா, இஞ்சி பூண்டு தட்டிப்போட்ட மசால்வடை, வாழை, மிளகாய், உருளை, கத்திரிக்காய் பஜ்ஜி வகைகள், பட்டினம் பக்கோடா, இனிப்பு அப்பம், பழம் பொரி பஜ்ஜி, நேந்திரம்பழ பஜ்ஜி என அனைத்துமே அருமையான ருசியில் இருக்கும்!
டீ, காபியும் அதிகம் தண்ணீர் கலக்காத பாலில் நாவில் ஒட்டும் சுவையில் இருக்கும்! கால மாற்றத்தில் பூஸ்ட், ஹார்லிக்ஸ் வகைகளும் பனங்கற்கண்டு, நாட்டுச் சர்க்கரை, கருப்பட்டி போட்ட டீயும் இருக்கிறது என்றது விலைப்பட்டியல்!
நான் போனபோது சுடச்சுட மெதுவடை சுட்டுக் கொண்டிருந்தனர்! ஒரு கருப்பட்டி போட்ட டீ சொல்லிவிட்டு ஒரு சூடான மெதுவடையை எடுத்தேன், கையில் எண்ணெய் ஒட்டாமல் மிளகும் வெங்காயமும் மணத்தது! அந்த மெதுவடை 25 ஆண்டுகளுக்கு முன் எப்படி நான் வாங்கிய சைசில் இருந்ததோ..
அதேபோன்ற பொன்னிறத்தில் ஒரு டோநட் சைசில் இப்போதும் இருந்தது. அந்த வடையும் டீயும் ஆஹா அதே பழைய சுவை என சான்றிதழியது என் நாக்கு. வெறும் 14 ரூபாய்க்கு அப்பாடா என்றானது வயிறு!
அன்று இந்தப் பதிவை டைப் செய்து கொண்டே நாகர்கோவில் 4 கி.மீ என்னும் மைல்கல்லை கடக்கிறது வண்டி. இன்னும் என் நாவில் அந்த தேநீரின் ருசி தங்கியிருக்கிறது. இது போல பலகாரங்களை எவ்வித சமரசமும் செய்து கொள்ளாமல் தரமாகவும் ருசியாகவும் தந்து..
பல்லாயிரக் கணக்கான மக்களின் இதயங்களில் அபிமானம் பெற்றவை சில கடைகள் மட்டுமே! இவர்கள் தங்கள் இனிய சேவையாலும் கைபக்குவத்தாலும் காலம் கடந்து நிற்கிறார்கள்!
நண்பர்களே நீங்களும் வள்ளியூர் பக்கம் போனால் பகவதி டீ ஸ்டாலில்1 டீ& வடை or பழம் பொரி பஜ்ஜி சாப்பிடாம போகாதிங்க! அந்த பனங்கற்கண்டு பால் இன்னும் டாப்.!
No comments:
Post a Comment