“வடிச்ச சோறும் வாவல் மீன் குழம்பும்”
குட்டையா இருக்குறவனை நம்பக்கூடாது என்று சொல்வது ஒரு புரளியா வேணா இருக்கலாம், ஆனா தட்டையா இருக்குற மீன்கள் ருசியாக இருக்கும் என்பது புரளியல்ல நிஜம்! அதில் நிறைய வகைகள் இருந்தாலும் இந்தப் பதிவில் வாவல் மீனை மட்டும் பார்ப்போம்! வீட்டில் மீன் குழம்பு சமையல் என்றால் அன்னிக்கு மீன் வாங்கப் போவது நான் தான் என்பது எழுதப்படாத ரூல்ஸ்!
அதிலும் முதல் நாளே என்ன மீன் வாங்குவது என்பதை முடிவு செய்து அந்த மீன் வரத்து தற்போது மார்க்கெட்டில் இருக்கான்னு தெரிந்து கொண்டுதான் கிளம்புவேன்! மொஸாட்டுக்கு இணையான தகவல்கள் தரும் மீன் மார்க்கெட் வாதகோடாரிகள் பலர் என் நட்பில் இருப்பதால் கவலையேயில்லை! அவர்கள் தரும் மீன்களைப் பற்றிய தகவல்கள் அத்தனையும் மிக மிகத் “துள்ளி”யமாக இருக்கும்!
நெல்பேட்டையில் என் நண்பன் சாகுலின் மீன்கடை இருக்கிறது! வியாபாரம் செய்யும் போது அவன் பேச்சில் தூண்டில் போட்டு கஸ்டமரை தன் வசம் ஈர்ப்பான்.. திடீரென பார்த்தால் அவனது உறவினர்களோடு இராமேஸ்வரம் கடலில் மீன்பிடி படகில் வலை வீசி மீன் பிடிக்கவும் போய்விடுவான்! மீன்கள் பற்றிய அபார ஞானம் மிக்கவன்! மீன் இறைச்சி துண்டுகள் வெட்டுவதில் விற்பன்னன்!
வெங்கி அதிகாலை 3 மணிக்கு கடலில் இருந்து கரைக்கு வந்தோம் இன்னிக்கு சுருக்குல (வலை) வெள்ளை வாவல் சிக்கியிருக்கு! அருமையான கறியுள்ள மீன் காரில் எடுத்துட்டு வாறேன் 7 மணிக்கு கடைக்கு வந்துடு என்பான்! நானும் அதிகாலை சேவல் கூவும் முன்பே வாவல் வாங்கக் கிளம்பினேன் (ஆஹா சேவல்/வாவல் கவித) நேற்று வரை வங்கக்கடலில் நீந்தி வசித்துவந்த அந்த ஜீவன்கள்..
இன்று அவற்றின் ஜீவனை இழந்து எனக்கு தீவனமாக மாறியிருந்தது! (மறுபடி கவித) வழக்கம் போல சாகுல் தட்டையான மீன்களை ப்ளேட் கட், பிறகு டைமண்ட் கட் என அற்புதமாக வெட்டித் தந்தான்! ப்ளேட் கட் என்பது தவா / க்ரில் வகை பொரிப்புக்கு அபாரமாக இருக்கும்! இளநீரில் இருக்கும் ஜெல்லி பதத்து தேங்காய் போல அதை மசாலா தடவி சுட்டுச் சாப்பிட்டால் அடடா! அது சொர்க்கம்!
வாவல் மீன் குழம்புக்கு நல்ல பொல பொலன்னு வடிச்ச சோறு, 3 கண்மாய் கத்திரிக்காய், ஒரு மாங்காய் போட்டு கூடவே 10 - 15 பூண்டு பற்கள் போட்டு குழம்பு வச்சா அதை அஞ்சாறு நாள் வச்சி சாப்பிடணும்! குழம்பு பழசாகும் ஒவ்வொரு நாளும் அதுக்கு ஒரு ஸ்டார் கூடிகிட்டே இருக்கும்! குழம்பில் மாங்கா போட்டா புளியை பார்த்து சேர்க்கணும் இல்லேன்னா அதை ரசித்து ருசிக்க முடியாது!
வாவல் மீனில் முட்களின் தொந்தரவு அதிகம் குத்தாது! குழம்புக்கும் சரி பொரிப்பதற்கும் சரி அல்டிமேட்டா இருக்கும்! சுடு சோற்றில் குழம்பை ஊற்றி பிரட்டினா போல கையில் பிசைந்து ஒரு வாய் குழம்பு மீனோடும் மறு வாய் பொரித்த மீனோடும் சாப்பிடணும்! பூண்டு கத்திரிக்காய் மாங்காய் எல்லாம் குழம்பு வச்ச உடனே சாப்பிடக் கூடாது! அதெல்லாம் அந்த சட்டியில் அப்படியே ஒரு நாள்..
அந்த இரவு முழுக்க ஊறணும்! உறை குத்திய பால் அடுத்த நாள் தயிர் ஆவது போல குழம்பில் ஊறிய கத்திரியும், பூண்டும், மாங்காயும் மறுநாள் மீனின் சுவைக்கு மாறியிருக்கும்! அதிலும் வாவல் மீன் எல்லாம் மரவள்ளிக் கிழங்கு போல அப்படியொரு மென்மையாக, வெண்மையாக வெந்திருக்கும்! சோற்றோடு மட்டுமல்ல அடுத்த நாள் காலை இட்லிகளுக்கும் இது செம காம்போ!
முதல் நாள் வைத்த மீன் குழம்போடு சோறு, இட்லி, தோசை இப்படி எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம்! ஆனா கண்டிப்பா மீன் குழம்போடு எல்லாரும் கட்டாயம் ஒரு வேளையாவது சாப்பிட வேண்டியது பழைய சோறு! அந்த கத்திரிக்காயும், மாங்காயும், பூண்டும் பழையது என்னும் அமுதத்தோடு சேரும் போதுஅப்படி ருசிக்கும்! பின்னே “நீராகாரத்துக்கு” ஏற்றது மீன்கள் தானே!!
No comments:
Post a Comment