Tuesday, 28 January 2025

அரண்மனை 5

“அரண்மனை 5” 🎥

அபின்யா தாய்லாந்து அரச குடும்பத்து ஆண் வாரிசு! இவர் லண்டனில் படிக்கும் போது அவருடன் படிக்கும் அனன்யா படேல் எனும் இந்தியப் பெண்ணை காதலிக்கிறார்! அரச குடும்பத்துக்கு தெரியாமல் இவர்கள் திருமணம் நடக்கிறது! அனன்யாவின் தோழி அபிராமி (தமிழர்) இவர்களது காதலுக்கு உதவியாக இருக்கிறார்!

அனன்யாவிற்காக லண்டனில் ஒரு சிறிய வீட்டில் வசிக்கிறார் அபின்யா! அந்த வீட்டில் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்! அனன்யா வயிற்றில் அரச வாரிசு வளர்கிறது! அரசல் புரசலாக இந்த செய்தி அரச குடும்பத்திற்கு போகிறது! பலத்த எதிர்ப்பு கிளம்புகிறது!

அனன்யாவை கொன்றுவிட ஆட்களை அனுப்ப முடிவு செய்கிறார்கள்! இந்த விஷயத்தை அபின்யாவின் சகோதரி அண்ணனிடம் சொல்ல! லண்டனிலிருந்து தம்பதிகள் இருவரும் வியட்நாம் அருகில் இருக்கும் அரச குடும்பத்து அரண்மனை ஒன்றில் போய் பதுங்குகிறார்கள்! அனன்யா தனது உதவிக்கு அபிராமியை அழைக்க அவர் அவரது பாட்டியோடு அந்த அரண்மனைக்கு வருகிறார்கள்!

அபிராமியின் பாட்டி அவரது கிராமத்தில் ஒரு சாமியாடி (குறி சொல்பவர்) அவர் இந்த அரண்மனைக்குள் அடியெடுத்து வைக்கும் போதே பல கெட்ட சகுனங்கள் தென்படுகின்றன! இந்த வீட்டில் ஏதோ அமானுஷ்யம் இருக்கிறது என்று அபிராமியிடம் மட்டும் சொல்கிறார் பாட்டி! பாட்டி அவர்கள் பாவம் உயிருக்கு பயந்து வந்து தான் இங்கே தங்கியிருக்கின்றனர்!

இப்போ இதை அவர்களிடம் சொல்ல வேண்டாம் என்கிறார் அபிராமி! இந்த அரண்மனைக்கு ஒரு ப்ளாஷ்பேக்! வியட்நாமில் போர் நடந்த போது இந்த அரண்மனையில் தான் பல இளம்பெண்களை சிறை வைத்து இருந்தனர்! அவர்களை பலவித கொடூர சித்திரவதைகள் செய்தது அந்த கொடுமையிலேயே கர்ப்பிணிப் பெண்கள் உட்பட பலர் இறந்தது எல்லாம் அந்த அரண்மனையில் நடந்து இருக்கிறது!

அந்த ஆன்மாக்கள் அரச குடும்பங்கள் மீது கொலை வெறியோடு அங்கு காத்திருக்கும் போது தான் அரச குடும்பத்தை சார்ந்த இந்த இருவரும் அங்கு நுழைந்தனர்! அரண்மனையில் அரச குடும்பத்து காலடி பட்டதும் ஆவிகள் சிலிர்த்தெழுகின்றன! ஆனால் அனன்யா கர்ப்பமாக இருக்கிறார் என்பதால் அந்த ஆவிகள் தங்கள் மூர்க்கத்தை அடக்கிக் கொண்டு பொறுமையாக காத்திருக்கின்றன!

உலகெங்கும் இவர்களைத் தேடும் அரச கூலிப் படைகள், இறுதியில் இவர்கள் வியட்நாமில் இந்த அரண்மனையில் இருப்பதை அரச பரம்பரைக்கு சொல்ல இந்த அரண்மனையின் வரலாறு தெரிந்த அரச குடும்பம் கூலிப் படைகளை திரும்ப வரச் சொல்லிவிட்டு, கருப்பு மாந்த்ரீகத்தில் கை தேர்ந்த சாமியார்களை மாறுவேடத்தில் அரண்மனைக்கு அனுப்புகிறார்கள்!

தாய்லாந்து, ஆப்பிக்கா, இந்தியா, நேபாள் என பல நாடுகளைச் சேர்ந்த மாந்த்ரீகர்கள் ஒவ்வொருவராக இந்த அரண்மனைக்குள் நுழைய அனைவரையும் ஆவிகள் விரட்டுகின்றன! அரண்மனை வளாகத்தினுள்ளேயே ஒரு புத்தர் கோவில் இருக்க அங்கு மட்டும் எந்த ஆவிகளும் நுழைய முடியாது!

அபிராமியும் பாட்டியும் அந்த கோவிலுக்குள் அபின்யாவை தங்க வைத்துவிட்டு அங்கிருந்து எக்காரணம் கொண்டும் வெளியே வரக் கூடாது என சத்தியம் வாங்குகின்றனர்! அனன்யாவின் பிரசவம் நெருங்குகிறது! அபிராமியின் பாட்டி இந்தத் தகவல்களை இந்தியாவில் உள்ள தலை சிறந்த மாந்திரீகர் ஒருவருக்கு அனுப்பி உதவி கேட்கிறார்!

அதே நேரம் இவர்களைப் பிடிக்கப் போன அனைத்து மாந்த்ரீகர்களும் இறந்துவிட்டதால் அரச குடும்பம் அதிரடியான ஆயுதங்களுடன் ஒரு படையை அனுப்புகிறது! முடிந்தால் வெடிகுண்டு வைத்து இந்த அரண்மனையையே தகர்த்துவிட உத்தரவிடப்படுகிறது! பாட்டி அங்கு ஒரு சிறப்பு சம்ஹார பூஜை துவங்க அதே நேரம் அரச படையும் அரண்மனையை சுற்றி வளைக்கிறது!

ஆவி ஒன்று அப்படியே அனன்யாவின் உருவம் எடுத்து அபின்யா மறைந்து இருக்கும் கோவில் வாசலுக்கு செல்ல, அப்போது அனன்யாவிற்கு பிரசவ வலி கண்டு அலற அந்த தலை சிறந்த இந்தியச் மாந்திரீகர் அங்கே நுழைகிறார்! வானில் பளீர் பளீரென மின்னல் மின்னி பெருத்த ஓசையுடன் இடி இடித்து ஹோவென பெருமழை துவங்குகிறது…

மற்றவை வெண் திரையில்.. 📽️

✍️ வெங்கடேஷ் ஆறுமுகம் ©️

🎥 காட்சிகளை டெவலப் செய்ய :

அரண்மனைக்குள் சிறைபட்ட பெண்கள் படும் சித்திரவதைகள், அந்த வீட்டில் இறந்த பெண்கள், அவர்களது சாபம் பற்றிய மாண்டேஜுகள்..

கிராமத்தில் பாட்டி குறி சொல்வது அவர் வெளிநாடு வர விரும்புவது போல சில காட்சிகள்..

ஒவ்வொரு நாட்டு மாந்த்ரீகர்களது ஆடைகள், வித்யாசமான, மாந்த்ரீகப் பொருட்கள், அவர்கள் மந்திரம்..

அரண்மனை புத்தர் கோவில் பற்றி ஒரு சிறு விளக்கம்..

இந்திய குறிசொல்லி சாமியார் பற்றி ஒரு சிறு அறிமுகம்..

மன்னர் குடும்பம் பற்றி ஒரு சிறிய மாண்டாஜ்..

தாய்லாந்து மன்னர் அரண்மனைக்கு பட்ஜெட் அதிகம்னா ஜோத்பூர், ஷோலாப்பூர்னு வட இந்திய மன்னர்களின் அரண்மனையா மாத்திக்கலாம். அதுவும் அதிகம்னா கண்டமனூர் ஜமீன், ஊத்துக்குளி ஜமீன், போடி ஜமீன்னு நம்ம ஊர் அரண்மனைகளா மாத்திக்கலாம்!

டிஸ்கஷனில் அமர்ந்தால் கதையை இன்னும் நன்கு டெவலப் செய்யலாம்..

✍️ வெங்கடேஷ் ஆறுமுகம் ©️

No comments:

Post a Comment