Wednesday, 29 January 2025

அனுமான்

#ஆஞ்சநேயர்

நமது குலதெய்வம், பொதுவான பிரபல கோவில்களின் தெய்வம் என்பதை எல்லாம் தாண்டி நமது இஷ்ட தெய்வம் என்று ஒவ்வொருவருக்கும் ஒரு தெய்வ நம்பிக்கை இருக்கும்! அப்படி எனக்கொரு இஷ்டமான தெய்வம் ஆஞ்சநேயர்! எனது வாழ்வின் இருள் படர்ந்த சிக்கலான பல தருணங்களில் ஒளியாக வந்தவர்!

3 வேளை உணவே கடினம் என்கிற வறுமை காலத்தை வளமான காலமாக மாற்றியவர் ஆஞ்சநேயர்! ஆம் 90களில் மேடை நிகழ்ச்சிகள் செய்த போது அங்கொன்றும் இங்கொன்றும் கிடைத்த மேடை வாய்ப்புகளும் அதில் கிடைத்த சொற்ப பணமும் அற்பமாக இருந்தாலும் ஒரு வேளை பசியையாவது போக்கியது!

இந்தச் சூழலில் நாமக்கல்லில் ஒரு மேடை நிகழ்ச்சி வாய்ப்பு தேடி வந்தது! ஆம் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் விழா நிகழ்ச்சி அது! நிகழ்ச்சியன்று காலையே நாமக்கல் வந்துவிட்டோம்! எங்களை கோவிலுக்கு அழைத்துச் சென்றனர்! விண்ணுக்கும் மண்ணுக்கும் விஸ்வரூபம் எடுத்து நின்றார் மேற்கூசரை இல்லா அக்கோவிலில்!

பார்த்ததும் மெய் சிலிர்த்தது! அவரை பயபக்தியுடன் வணங்கி பின் கோவில் அருகே அமைத்த மேடையில் மாலை நிகழ்ச்சியைத் துவங்கினோம்! அன்று எங்கள் நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பும் கைத்தட்டல்களும், பாராட்டும் அதற்கு முன்பு நாங்கள் கேட்டதே இல்லை! இந்த நிகழ்ச்சியே எங்களுக்கு புகழ் வெளிச்சம் தந்தது!

அந்த நிகழ்ச்சிக்கு பின்பு நாமக்கல், திருச்செங்கோடு, ஈரோடு, பவானி, சேலம், கரூர் என அனைத்து ஊர்களிலும் எங்கள் கால் படாத கிராமங்களே இல்லை எனும் அளவுக்கு நிகழ்ச்சிகள் குவிந்தன! தொடர்ந்து 5 ஆண்டுகள் நிற்காமல் ஓடிக்கொண்டே இருந்தோம்! டிவி சினிமா வாய்ப்புகளும் எங்களைத் தேடி வந்தன!

எல்லாம் எங்கள் திறமை தான் என்றாலும் அதற்கு ஆஞ்சநேயரின் அருளும் இருந்ததாக தீவிரமாக நம்பினோம். நாமக்கல் வழியாக வேறு ஊர் நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போதெல்லாம் கோவிலுக்கு சென்று அவரை சேவித்துவிட்டே கிளம்புவோம். நாங்கள் செல்லும் போதெல்லாம் ஏதாவதொரு விசேஷ நாட்களாக அமைந்துவிடும்!

திடீரென நாங்கள் போகும் நாளில் ஆஞ்சநேயர் முத்தங்கியில் இருப்பார், அல்லது சந்தன காப்பில் இருப்பார், அல்லது 10008 வடை மாலை சூடியபடி அருள் புரிவார்! எப்படி விசேஷ நாளன்று கரெக்டா வர்றிங்க யாரும் சொன்னாங்களா என கோவிலில் கேட்பார்கள்! அப்படி ஏதுமில்லை எல்லாமே தற்செயல் தான்!

இதனால் அவர் மீதான எங்கள் நம்பிக்கை இன்னும் அதிகரித்தது! மீனாட்சியம்மன் கோவிலிலும் முக்குறுணி விநாயகர் சந்நிதி வழியாக சுவாமி சந்நிதி திரும்பும் இடத்தில் தூணில் இருக்கும் ஆஞ்சநேயரை தேடிப் போய் வழிபடுவோம்! அவரை வழிபடும் அன்று ஏதாவதொரு நல்ல செய்தி அல்லது ஒரு நல்ல வாய்ப்பு நிச்சயம் வரும்!

ஏதாவது ஒரு பிரச்சனையில் கலங்கி நிற்கும் போதோ அல்லது முடிவு எடுக்கமுடியாத குழப்பத்திலோ திடீரென யார் மூலமாவது அவர் பெயர் உச்சரிக்கப்படும்! அந்த நொடியே மெய் சிலிர்க்கும்! டேய் நீ என்னை நினைக்காட்டியும் உன்னை நான் இன்னொருத்தர் மூலமா நினைக்க வச்சேன் பார்த்தியா என்று அவர் சொன்னது போல தோன்றும்!

வெளியூர் பயணங்களில் வழி மாறிப் போகும் சில ஊர்களில் ஒரு ஆஞ்சநேயர் கோவில் எங்களை வரவேற்கும்! அது இந்தப் பக்கம் வந்துட்டு என்னை பார்க்காம போனா விட்டுடுவேனான்னு அவர் கேட்கிறா மாதிரியிருக்கும்! ஆஞ்சநேயரின் தற்செயல் தரிசனம் எங்களுக்கு அமைந்த பல நிகழ்வுகள் அவர் வால் போலவே நீளம்!

{இந்த 2025 புத்தாண்டு அன்றும் ஒரு நிகழ்வு! அதை வேறொரு பதிவில் எழுதுகிறேன்}

No comments:

Post a Comment