Sunday, 26 January 2025

🥘 திருச்சி சங்கீதாஸ் 🥘

🎵 #ருசிக்கும்_சங்கீதம் 🎵

2024 டிசம்பர் இறுதி முதல் 2025 பொங்கல் விடுமுறை முடியும் வரை திருச்சியில் பற்பல ஈவண்ட்டுகளில் இருந்தேன். என் பணி மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே! வாய்ப்புள்ள இதர நேரங்களில் ஶ்ரீரங்கம் அம்மா மண்டபம், ஏகாதிசி அரங்கன் தரிசனம், உலகின் மிகப் பெரிய சஞ்சீவ ஆஞ்சநேயர், பட்டர் ஃபிளை பார்க், திருவானைக்கோவில், மலைக்கோவில் அடிவாரம், சிங்காரத்தோப்பு உலா என்று ஒவ்வொரு நாளும் பற்பல இனிமையான அனுபவங்கள்!

கோவில் செல்லாத நாட்களில் அசைவம் சென்ற நாட்களில் சைவம் என்று எனது உணவுத் தேடலையும் தொடர்ந்தேன் திருச்சியில் பனானா லீஃப், குரு, அஜந்தா, பத்மா கஃபே, பார்த்தசாரதி, வசந்த பவன், உட்லண்ட்ஸ், சங்கர் கஃபே, ஶ்ரீமடப்பள்ளி, சரஸ்வதி கஃபே எல்லாமே ஃபேமஸ்! ஆனால் முதல் முறையாக சங்கீதாஸ் (சத்திரம் பேருந்து நிலையம் to கரூர் சாலையில்) சாப்பிடும் வாய்ப்பு கிட்டியது! அதுவும் நான் தேர்வு செய்யவில்லை!

முக்கொம்பு வழியாக திருச்சி நகருக்குள் நுழைந்த போது ஓட்டுநர் அண்ணன் இங்கே நிறுத்தினார் நேரம் அப்போது இரவு 9:20 இன்றைய யூடியூபர்கள் பாணியில் சொன்னால் கடையோட அட்மாஸ்பியரே அல்டிமேட்டாக இருந்தது! இதுபோன்ற பெரிய ஓட்டல்களில் இரவு 9 மணிக்கு மேல் இட்லி கிடைப்பது ஐஐடியில் இடம் கிடைப்பதற்கு இணையாகும்! அப்படியே அங்கு யாராவது இட்லி சாப்பிட்டுக் கொண்டிருப்பதை பார்த்து..

நாம் இட்லி கேட்டால் சாரி சார் அவங்களுக்கு தந்தது தான் கடைசி, இட்லி தீர்ந்திடுச்சு என்பார்கள்! நானும் போய் அமர்ந்து இட்லி 1 ப்ளேட் என்றேன் சர்வர் அங்கிருந்து மறைந்தார்! உள்ளே போயிட்டு இட்லி தீர்ந்திடுச்சுன்னு அசடு வழிய வருவார் என எதிர்பார்த்தேன், ஆனால் இட்லியின் மீது ஆவி வழிய சுடச்சுட இட்லி சூடான சாம்பார் & சட்னி வகைகளுடன் வந்தார்! இப்போது நான் அசடு வழிந்தேன்! இட்லி இலவம் பஞ்சு மென்மை! சாம்பாரைப் பார்த்ததும்..

என் தந்தையார் ஆறுமுகம் நினைவுக்கு வந்தார்! சச்சினின் ஸ்டிரைட் டிரைவ் போல அப்பா வைக்கும் சாம்பார் தனித்துவமானது! அந்தத் தரத்தில் பல ஆண்டுகளுக்கு பின்னர் ஒரு அற்புதச் சாம்பாரை ருசித்தேன். அருமையான தேங்காய் சட்னியும் அதோடு தந்த வெங்காயச் சட்னி, புதினாமல்லி சட்னிகளும் நாவில் சொர்க்கத்தை உணர வைத்தது! அடுத்த பிளேட்டும் இட்லி சொல்ல நினைத்த போது எதிரே சுவரில் இலை காளான் பிரியாணி என்னும்..

விளம்பர அறிவிப்பு என்னைக் கவர்ந்திழுத்தது! ஒரு பிரியாணி என்றேன்! இட்லிக்கு சொல்லாத சாரியை இப்போது சொன்னார் சர்வர்! அது மதிய மெனுவாம்! என்ன சொல்லலாம் என்று யோசித்த போது பிராமண சமுதாய திருமணச் சீரில் வைக்கும் பருப்புத் தேங்காய் போல கூம்பு வடிவ நெய் ரோஸ்ட் என்னைக் கடந்தது! இதை எல்லாம் 48 ஆண்டுகளுக்கு முன்பே பார்த்தவன் தான் இருப்பினும் தங்க நிறமும் காபிப் பொடி நிறமும் உள்ள..

நெய்ரோஸ்ட் ஒரு புலி போன்றது! ஆம் புலியைக் காட்டில் காண்பது அரிது! அதுபோலத் தான் இந்த இரண்டு நிறமும் இணைந்த நெய் ரோஸ்ட்டைக் காண்பதும்! தோசை மாஸ்டருக்கு செக் வைக்க முடிவு செய்து ஒரு நெய் ரோஸ்ட் ஆனா முறுகல் இல்லாமல் என்றேன்! நமது ஓட்டுநர் அண்ணன் இட்லிக்கு பிறகு புரோட்டா சொல்லியிருந்தார் ரோஸ்ட் வர தாமதிக்க அவருக்கு வந்த புரோட்டாவில் ஒன்றை கர்ணன் போல எனக்களித்தார்!

ஆஹா! ஒரு சைவக் கடையில் இப்படி ஒரு புரோட்டா சாப்பிட்டு எத்தனை நாளாயிற்று! புரோட்டாவும் சரி அதற்கு தந்த 2 வகை குருமாக்களும் சரி அப்படி ஒரு பெஸ்ட் காம்போ! எனது நெய் ரோஸ்ட் வந்தது! நான் வைத்த செக்கில் தப்பி எனக்கு செக் வைத்திருந்தார் மாஸ்டர்! ஓட்டலில் இரவு 9 மணிக்கு மேல் பதமான தோசை கிடைக்காது! ஏன்னா தோசைக் கல்லின் சூடு அப்படி! முறுகல் மிக மிக எளிது ஆனால் பதமான தோசை தான் கடினம்!

பதமான தோசைக்கு இதமான இட்லி மிளகாய் பொடி, சட்னி, சாம்பாருடன் அதகளம் தான்! முழு தோசையும் சாப்பிட ஆசைதான் ஆனால் எனக்கு புரோட்டா தானம் செய்த ஓட்டுநர் அண்ணனின் முகம் நினைவுக்குவர என் ரோஸ்ட்டில் பாதியை அவருக்குத் தந்து “முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்” எனும் நம் முன்னோரது வாக்கை மெய்யாக்கினேன்! மறுநாள் முதல் காலை, மதியம், இரவு 3 வேளையும் அங்கே தான்! பொங்கல், பூரி மசாலா..

இலை புரோட்டா, இலை பிரியாணி அனைத்தும் அருமை! மதியம் மீல்ஸ் ஆஹா லெவல்! ஒரு நாள் தாமதமாகி காலை உணவை மிஸ் செய்து 11 மணிக்கு சாப்பிடப் போனேன். இந்த நேரம் காலை டிபனுக்கும் மதிய மீல்சுக்கும் இடைப்பட்ட ரெண்டுங்கெட்டான் நேரம்! டிபன் வகைகள் முடிந்து மீல்ஸ் தயாராகவில்லை என்றனர்! சாம்பார் சாதம், தயிர் சாதம், லெமன் சாதம் என்றதும் சாம்பார் சாதம் சொன்னேன்! கேரளப் படகின் வடிவில்..

ஒரு நீளக் கிண்ணத்தில் சாம்பார் சாதம் வந்தது! கூடவே சிறிய கிண்ணத்தில் பொரியல், அப்பளம். சாம்பார் சாதம் அபார சூடாக பிஸிபேளாபாத் போல இருந்தது! பிளிபேளாபாத் என்னும் கன்னடச் சோறு மெல்லிய தித்திப்பில் இருக்கும் கரம் மசாலாவின் காரம் கன்னக் கதுப்புகளில் பரவும்! அந்த ருசியை மனதில் நினைத்து ஸ்பூனில் அள்ளி ஊதி ஊதி சாப்பிட்டால்.. வாவ்! நான் ருசியில் தமிழ்நாட்டுக்காரன் என்றது சாம்பார்!

திருச்சி, தஞ்சை & டெல்டா மாவட்டங்களில் கல்யாணச் சாம்பார் என்று மிகப் பிரசித்தம்! கல்யாண விருந்தில் முழு சாப்பாட்டையும் சாம்பார் வாங்கியே ரசித்து சாப்பிடுவார்கள்! அந்த ருசியில் இருந்தது! முருங்கை, பீன்ஸ், வெங்காயம், கிழங்கு, அவரை எல்லாம் பதமாக வெந்து சாதத்தில் குகனோடு ஐவராகி இருந்தது! டிபிகல் தமிழ்நாட்டு சுவையில் ஒரு சாம்பார் சாதம்! எதிலும் குறை காண முடியவில்லை அப்படி ஒரு உயர்ந்த தரம்!

முக்கியமாக அங்கிருக்கும் பணியாளர்களின் கவனிப்பும் அன்பான சேவையும் என்னை வியப்பில் ஆழ்த்தியது! இன்முகத்துடன் எல்லா பணியாளர்களும் உபசரித்தனர்! விக்ரமன் பட கேரக்டர்கள் போல அவ்வளவு நல்லவர்களாக இருந்தனர்! அடை, ஆப்பம், பணியாரம், ஃப்ரைடு ரைஸ் வகைகளை ருசிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை! ஆனால் என்னுடன் வந்திருந்த நண்பர்கள் அதை எல்லாம் ருசித்து மகிழ்ந்து பாராட்டினர்! திருச்சியின் சைவ ஓட்டல்களுக்கு..

சங்கீதா ஒரு அடையாளமாக இருப்பது, இதுபோன்ற ஓட்டல்கள் அமையாத ஊர்க்காரர்களுக்கு பொறாமையை வரவழைக்கும்! எனக்கும் வந்தது! இங்கு விலை அதிகம் என்பார்கள்! ஏனெனில் அங்கு தரமும் சுவையும் அப்படி! இதே தரமும், ருசியும், உபசரிப்பும் கொஞ்சமும் குறையாத வரை இவர்களுக்குத் தோல்வியே இல்லை! நாம் சங்கூதற வயசு வரை இனி சங்கீதானு நம்பி சாப்பிடலாம் 💖

டிஸ்கி : இது சத்திரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் கரூர் போகும் சாலையிலுள்ள கடையில் நான் சாப்பிட்ட அனுபவம். வேறு கிளைகளில் அல்லது வேறு ஊர் சங்கீதாவில் உங்களுக்கு சங்கு சத்தம் கேட்டிருந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல! தொடர்ந்து 4 நாட்கள் குறைந்தது ஒரு நாளைக்கு 2 வேளை இங்கு சாப்பிட்ட பின்பே இதை..

என் மனசாட்சியோடு எழுதியுள்ளேன். இதற்காக நான் எவரிடமும் எந்த விதத்திலும் சலுகையோ, தொகையோ பெறவில்லை! மாறாக அங்கு எங்களுக்கு சேவை செய்த அனைத்து பணியாளர்களுக்கும் 4 நாட்களின் 10 வேளைகளிலும் என்னால் இயன்ற ஒரு நல்ல தொகையை நன்றி சொல்லி ஊக்கப்படுத்தி தந்திருக்கிறேன்! 🥰🥰💖

(இதைத் தந்ததை என் பெருமைக்காக சொல்லவில்லை, இந்த அருமை தெரியாத சில.. மகிஷாசுரர்கள் நீ பணம் வாங்கிட்டு எழுதினே என்பார்கள் அதற்கு தான்)

கொசுறு டிஸ்கி : இது என் தாய் மீது சத்தியம்!

{இந்த ஃபேஸ்புக்கில் ஒரு ரிவ்யூ எழுதறது எம்புட்டு கஷ்டம்.. அவ்வ்வ்வ்🤪}

No comments:

Post a Comment