#திருச்சி_கல்யாண_பிரியாணி
“KMS ஹக்கீம் பிரியாணி”
மதுரை மேலூருக்கு அருகில் இருக்கும் நெல்லுகுண்டுப் பட்டியை மதுரை மக்களே அதிகம் அறிந்திருக்கமாட்டார்கள்! அந்த ஊரின் பெயருக்கு சிறப்பு சேர்ப்பவர்கள் தான் இந்த KMS ஹக்கீம் கல்யாண பிரியாணி கடைக்காரர்கள்! திண்டுக்கல் பிரியாணிக்கு இணையாக திருச்சியின் பிரியாணிக்கும் ஒரு இடமுண்டு! இந்தச் செய்தி பலருக்கு வியப்பாக இருக்கலாம்! ஆனால் அதுவே மெய்!
திருச்சி புகாரி ஓட்டல் பிரியாணி திருச்சியில் மிகவும் புகழ் பெற்ற பிரியாணியாகும்! இவர்கள் குடும்பத்துக் கடையாக திருச்சி திண்டுக்கல் சாலையில் இனாம் குளத்தூரில் வார இறுதிகளில் இயங்கும் சிவத்தகனி பிரியாணி புகழ் பெற்ற பிரியாணிக் கடைகளில் ஒன்றாகும்! அந்த சிறிய ஊருக்கு பிரியாணி வாங்க கூட்டம் தேன்கூட்டில் குவியும் தேனீக்கள் போல மொய்க்கும்!
இப்போது அந்தக் கடை இருக்கா என்பது தெரியவில்லை! நல்ல பிரியாணிக்கு திருச்சியும் புகழ் பெற்ற ஊர் தான்! இங்கே இந்தக் கல்யாண பிரியாணிக்கடை பற்றி என்னிடம் சொன்ன நண்பர் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் உயர் பதவியில் இருப்பவர்! என்னைப் போலவே ஒரு உணவு ரசிகர்! அவர் பரிந்துரைத்ததால் ஒரு நல்ல நேரத்தில் WB ROAD, KMS பிரியாணிக்கடைக்குள் நுழைந்தேன்!
பசுமையான தோட்டம் போல அலங்கரிக்கப்பட்ட இண்டீரியர்.. இன்ஸ்டா பிரியர்கள் ரீல்ஸ் போடலாம்! இங்கு 2/3 மட்டன் போன் சூப் ஆர்டர் செய்தேன்! என்னுடன் 2 நண்பர்கள் வந்திருந்தனர்! ஒரு அசைவக்கடையில் மட்டன் சூப் என்பது ஒரு சோறு பதம்! ஆம் சூப்பிற்கு அவர்கள் தேர்ந்தெடுக்கும் கறியை வைத்தே அவர்களது ரசனையை நாம் அறியலாம். நல்ல சூடான சூப் பரிமாறப்பட்டது!
சூப்பின் மணமும் அதன் கன்ஸிஸ்டன்ஸியுமே சிறப்பாக இருந்தது! உள்ளே கால் மற்றும் நெஞ்செலும்புகளின் கறி இருந்தது! இதுவே மிகச் சிறந்த மட்டன் எலும்பு சூப்புக்கான இறைச்சிகள் ஆகும்! அவர்கள் தந்த அளவும் தரமாக இருந்தது! இறைச்சியோடு மிளகும் உப்பும் தூவி குடித்த சூப் அற்புதமாக இருந்தது! தேங்காய் சில்லு போல எலும்புகளை நன்கு மென்று ரசித்து ருசித்து சாப்பிட்டோம்!
அடுத்து இங்கு என்ன ஸ்பெஷல் என்ற போது KFC சிக்கன் போல KMS சிக்கன் என்றனர். அதில் ஒன்றை ஆர்டரினோம்! வட்டமான கட்லெட் போல தட்டில் 6 துண்டு சிக்கன் எலும்பில்லாமல் ஃப்ரை செய்து மயோனீஸ் உடன் தந்தனர்! நிச்சயம் KFC தரத்திற்கும் மேலேயே ருசியாக இருந்தது! சில்லி டிரை ஃபிஷ் (மாஷா மீன்) ஒன்றும், வஞ்சிரம் மீன் ஃப்ரை ஒன்றும் ஆர்டர் செய்தோம்.
இரண்டு மட்டன் பிரியாணி ஆர்டர் செய்து 3 பேர் ஷேர் செய்யலாம் என்று நாங்கள் போட்ட திட்டம் பொய்யானது! ஆம்! 3 பிரியாணி ஆர்டர் செய்யும் அளவிற்கு பிரியாணியின் ருசியும், கறிகள் வெந்த பதமும் இருந்தது! பற்றாகுறைக்கு அவர்கள் தந்த கத்திரிக்காய் பருப்பு தால்ஸா அட்டகாசமாக இருந்தது! நாங்கள் ஆர்டர் செய்த மீன் வகைகள் வந்தன! அப்படி ஒரு அபார சூடு + நறுமணம்!
குடை மிளகாய், வெங்காயத்தை மிகப் பதமாக வதக்கி சேர்த்த சில்லி ஃபிஷ் ஒவ்வொரு முறை சுவைக்கும் போதும் இன்பத்தை அள்ளியள்ளி தந்தது! மிதமான கார வஞ்சிரம் ஃப்ரை நேரடியாக மோட்சம் என்பது போல அப்படி ஒரு ருசி! பிரியாணியில் கறிகள் அல்வா போல குழைந்தும் எலும்புகளை லேசாகத் தட்டினாலே உள்ளிருக்கும் ஜெல்லி தனியாக கழன்று தட்டில் விழுந்தது!
கறி பிரியாணிக்கும் அப்படி ஒரு அபாரமான சூடு! இறுதி வரை அது குறையவே இல்லை பிறகு ஒரே ஒரு வெள்ளைச் சோறு வாங்கி அதை மூன்று பேரும் பகிர்ந்து கொண்டு, மீன் குழம்பு, பிறகு ரசம், பிறகு தயிர் என நிறைவு செய்தோம்! இதற்குத் தனியாக 2 ஆம்லெட் ஆர்டர் செய்து அதைத் தொட்டுக் கொண்டு ருசித்தோம்! அங்கே குறை என்றால் அது நீர்த்த தயிர் வெங்காயம் மட்டுமே!
அது கொஞ்சம் திக்காக தந்தால் இவர்களை இந்த ஊரில் அடிச்சிக்க ஆள் இல்லை என்பேன்! 3 பேர் சாப்பிட்டதற்கு 1696/- வந்தது! இந்தத் தொகை வொர்த்! மிகச் சரிதான் என்பேன்!
{முன்னெச்சரிக்கையான டிஸ்கி } நான் இந்த ஒரு மாதத்தில் திருச்சி சிங்காரத் தோப்பு அருகே (WB ROAD) KMS பிராஞ்ச்சில் (டிசம்பர் 4 - ஜனவரி 15 வரை) கிட்டத்தட்ட 8 முறை சாப்பிட்டு அதன் பிறகே இந்தப் பதிவை எனது மனசாட்சிக்கு விரோதமின்றி எழுதுகிறேன்! நீங்க சொல்ற அளவுக்கெல்லாம் இந்தக் கடையில் உணவுகள் அவ்வளவு நல்லா இருக்காது.. இங்கே விலை அதிகம்..
இது எளிய மக்களுக்கான கடை அல்ல.. என நீங்கள் சொன்னால் அது உங்களது விருப்பம் என்பேன்! உனக்கென்னப்பா நீ அவங்க கிட்ட காசு வாங்கிட்டு எழுதறியான்னு அபத்தமா கேட்டா ஆமாம் 3000 கோடி தந்தால் மட்டுமே எழுதுவேன்! இந்தத் தொகை தான் ஒரு ஓட்டலை ஆதரித்து ரிவ்யூ எழுத எனது கட்டணமாகும்! வேறு கிளைகளில் உங்களுக்குக் கிடைத்த கெட்ட அனுபவங்களை..
இந்தப் பதிவில் வந்து கொண்டு வந்து கொட்டவேண்டாம்! எந்த ஓட்டலிடமும் பணம் பெற்றுக் கொண்டு ரிவ்யூ எழுதும் அளவில் கடவுள் என்னை வறுமையில் வைத்திருக்கவில்லை! இது எனது மனசாட்சியோடு எழுதப்பட்ட உண்மைப் பதிவு என்பதை மீண்டும் ஒரு முறை இங்கு உறுதியளிக்கிறேன்! உங்கள் புரிதலுக்கு நன்றி!
No comments:
Post a Comment