Thursday, 16 January 2025

சேலம் பாதாம்கீர்

சேலத்து மாம்பழம் தித்திக்கும் மாம்பழம் என்று பள்ளியில் பாடல் சொல்லித் தந்த காலத்தில் எனக்கு அதை விட பிடித்தது இந்த பாதாம்கீர்! எனது தந்தையாரே அப்போது சேலத்தின் புகழ் பெற்ற இனிப்பகத்தை நடத்தி வந்தவர்! இருப்பினும் உள்ளூர் ஆட்டக் காரனை மதிக்காத கரகாட்ட கோஷ்டி மனப்பான்மையில் நான் எங்களது இனிப்பை விட்டுவிட்டு வெளியே தேடித் தேடி ருசிப்பேன்!

சேலத்து அல்வா புட்டு & அரிசி உருண்டை, ஹென்றி உல்சியின் தேங்காய் பன், பெங்களூர் அய்யங்காரில் தில் பசந்த், சாந்தி தியேட்டர் அருகில் கிடைக்கும் சீம்பால் துண்டுகள், சிவா பேக்கரி டீ கேக் இந்த வரிசையில் பானகம் கேட்டகிரியில் என் லிஸ்டில் இருப்பது கோட்டை வாசல் பின்புறம் SBI வங்கி கிளைக்கும், பெண்கள் உயர்நிலைப் பள்ளிக்கும் நடுவில் இருக்கும் சந்தில் தான்..

இந்த பாதாம்கீர் கடை ஒளிந்திருக்கிறது! பெரிய ஐஸ்கட்டி பாரை தச்சர்கள் வைத்திருக்கும் இழைப்பு உளி போன்ற ஒரு உளியில் சீவிச் சீவி சீவிய ஐஸ் துகள்களை கிளாஸில் போட்டு அதன் மீது பாதாம் பாலையும், சர்பத் எஸன்ஸையும் ஊற்றி நன்கு எல்லாம் கலக்கும்படி டீ ஆற்றுவது போல ஆற்றி கிளாஸில் தருவார்கள்! பாதாமின் ருசியும், எஸன்ஸின் இனிப்பும், அந்த ஐஸ் துகள்களின் சில்லிப்பும் அடடா!

நம் நாவில் மட்டுமின்றி நமது கன்னக் கதுப்புகளிலும் பட்டு குடிக்கும் அனுபவத்தை ஜில்லென நிரப்பி சிறப்பிக்கும்! நான் 2 ரூபாய் விலை இருந்த காலத்தில் போய் சாப்பிட்டது! போன வாரம் துபாயில் இருந்து வந்திருந்த நண்பன் மாறன் மாப்ள அந்த பாதாம் கீர் கடை உனக்கு ஞாபகம் இருக்கா? போலாமா? என்றான்! என் கண் முன்னே கடந்த காலம் ஒளிபரப்பானது! அப்ப 25 காசு தான் பாக்கெட் மணி!

அதுக்கு அரிசி உருண்டை, அல்வா புட்டு, முறுக்கு, பொம்மை பிஸ்கெட், வெண்ணெய் பிஸ்கெட், தேன் மிட்டாய், கல்கோணா, எலந்தவடை, தட்டை போன்ற எளிய பிள்ளைகளின் தின்பண்டங்கள் தான் கிடைக்கும்! கப் ஐஸ், பாதாம்கீர் போன்ற எல்லாம் வசதியான பிள்ளைகளுக்கு! அரிதாக அம்மா தரும் 1 ரூபாய், வீட்டுக்கு வந்த உறவினர்கள் தரும் 1 ரூபாய் போன்ற அதிர்ஷ்ட வரவுகளையும்..

இந்த பாதாம்கீரை குடிப்பதற்காகவே எங்களது தினசரி கோட்டா 25 பைசாக்களை நாங்கள் வைரக்கியமாக சேமித்ததையும் இதில் எப்போது கையில் 2 ரூபாய் சேர்ந்தாலும் அந்த நொடியே நாங்கள் நிற்கும் இடத்தில் இருந்து விட்டலாச்சார்யா படங்களில் வருவது போல டஷ்ஷென மறைந்து பாதாம்கீர் கடையில் போய் நிற்போம்! என்னடா ஆச்சு? என்ற மாறனின் குரல் என்னை தட்டியெழுப்பியது.

அந்தக் கடை எல்லாம் இங்கே இன்னும் இருக்காடா மாப்ளே? என்றேன்! இங்கே மாறனைப் பற்றி ஒரு சிறிய அறிமுகம் மாறன் என் பள்ளித் தோழன், துபாயில் செட்டில் ஆகிவிட்டான்! அங்கே ஒரு நிறுவனத்தின் உயர் பொறுப்பில் இருக்கிறான்! உலகில் ஆர்டிக் அண்டார்டிக் தவிர உலகின் அனைத்து கண்டங்களும் சுற்றியவன்! திடீரென மாப்ள ஸ்பெயினில் இருக்கேன்.. இப்போ இத்தாலிடா..

நாளைக்கு ஆர்ம்ஸ்டர்டாம் என்று போன் செய்வான்! லூயிஸ் 14 பீட்ஸா, சால்ட்பீ பட்டர் ஸ்டீக் போன்ற மன்னர்கள் சாப்பிடும் உணவுகளை ருசித்தவன்! சுருக்கமா சொன்னா பல ஷேக்குகளுக்கு மட்டுமின்றி என்னைப் போன்ற பேக்குகளுக்கும் நண்பன்! அப்படிப் பட்ட செல்வந்தன் சேலத்தின் சந்தில் கிடைக்கும் ஒரு பாதாம்கீரை சிலாகிக்கிறான் என்றால் நம் பால்ய காலம் எவ்வளவு மதிப்பு மிக்கது!

மாறனுடன் அந்தத் தெருவில் நுழைந்தேன்! தற்போது ஏன் எதுக்குனு தெரியாமலேயே கருப்பட்டிக் காபி கடைகள் பெருகியிருப்பதைப் போல அந்த சந்து முழுவதும் ஏராளமான பாதாம்கீர் கடைகள் இருந்தன! திருப்பதியில் மொட்டையர்கள் கூட்டத்தின் நடுவில் வந்து நின்றது போல எங்களுக்கு ஒரு குழப்பம்! நாங்கள் இருவருமே 1990களில் சேலத்தை விட்டு புலம் பெயர்ந்தவர்கள் ஆதலால்..

சேலத்திலேயே வசிக்கும் நண்பன் பிரபுவிடம் கேட்க அந்தக் கடையாடா அது கேர்ள்ஸ் ஸ்கூலுக்கு பின்புறம் இருக்கு! கோட்டை வாசல் பின்புற தெருன்னு பேரு என்று கூகுள் மேப்பானான்! திருப்பதி குழப்பம் நீங்கி அந்த திருப்பத்தில் போய் நின்றதும் அப்படியே வியப்பில் உறைந்தோம்!! அப்படியே எங்களை டைம் மிஷினில் ஏற்றி 1984 ஆண்டுக்கே அழைத்து வந்தது போல இருந்தது!

கடை முன்னால் தேன் கூட்டில் அப்பிக் கிடக்கும் தேனீக்கள் போல பெரிய கூட்டம் நின்று பாதாம்கீரை ருசித்துக் கொண்டிருந்தனர்! அருகில் ஒரு பெரிய ஐஸ் பெட்டியில் பாதாம்கீரை 200மிலி பெட் பாட்டில்களில் வைத்திருந்தனர்! அது பார்சலாம்! இந்த ஒன்றைத் தவிர கடை 1984 தோற்றத்திலேயே இருந்தது! அதே ஐஸ்கட்டி சீவல், பாதாம் பால், சர்பத் எஸன்ஸ் ஊற்றி டீ போல ஆற்றித் தந்தனர்!

எனக்குத் தெரிந்து இங்கிருக்கும் எல்லா கடைகளையும் விட இந்தக் கடை பாதாம்கீர் தான் பெஸ்ட்! அதற்கு இங்கு கூடி இருக்கும் கூட்டமே சாட்சி! சில உணவுகள் சத்தமே இல்லாது காலத்திற்கும் தங்கி அவ்வூரில் தனி சிறப்பு பெற்றுவிடும்! சேலத்து பாதாம்கீரும் அதில் ஒன்று! முதல் சிப்பில் எனக்கு அந்த பழைய ருசி தெரியவில்லை எனினும் பழைய கால நினைவுகளால்..

அந்த பாதாம்கீர் நாவில் இனித்தது! ஒரு வேளை என் வயதின் காரணமாகவோ (அ) இன்றைய பொருட்களின் தரமோ இதன் ருசியை மாற்றி இருக்கலாம் ஆனால் நம் பால்யத்தின் நினைவுகளை மீட்டெடுக்கும் இது போன்ற உணர்வுகளின் ருசி என்றுமே மாறாது!

No comments:

Post a Comment