Tuesday, 21 January 2025

#சம்பார_தோசை




குறிஞ்சிப்பூ பற்றி உங்களுக்குத் தெரியும்! 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்குமென்று! அதே போல வருடத்தில் 20 நாட்கள் மட்டுமே கிடைக்கும் சம்பார தோசை பற்றித் தெரியுமா? அதென்ன ஓ சாம்போ.. ஓ சாம்போனு அடிக்கடி சொல்றிங்க அவரு யாரு உங்க அப்பாருங்களா என கவுண்டமணி ஜெய்ஹிந்த் படத்தில் கேட்பார்! 


அதுபோல் நமக்கு சாம்பார் தோசை தாங்க தெரியும், அது என்னங்க சம்பார தோசை? அப்படியே கொஞ்சம் ஶ்ரீரங்கம் பக்கம் போவோமா! பெருமாள் ஒரு பிரசாதப் பிரியர்! மற்ற கடவுளர்களை விட இவருக்கு படைக்கும் பிரசாதங்களுக்கு தனிப் பட்டியலே உண்டு! அக்கார அடிசில், தஜ்ஜோன்னம் என்கின்ற  தயிர்சாதம்..


புளியோதரை, சர்க்கரைப் பொங்கல், கற்கண்டு சாதம், திருப்பதி லட்டு, மிளகுப் பொங்கல், அடை, கருப்பு உளுந்து வடை, காஞ்சி இட்லி, அழகர் கோவில் தோசை இப்படி அதன் லிஸ்ட் நீளம்! ஏன் பெருமாளுக்கே பிரசாத் என்னும் பெயர் உள்ளதல்லவா! தோசை என்றால் நமது வெங்கடேச பிரசாத்திற்கு கொள்ளை ஆசை! 


பெருமாள் பிரசாதங்களில் தோசை முக்கியமானது! அழகர் கோவில் தோசைக்கு முன்னோடி தான் ஶ்ரீரங்கத்தின் சம்பார தோசை! ஏகாதிசி விரதம் இருப்பவர்கள் சாப்பிடுவது! அதுவும் வைகுண்ட ஏகாதிசி சமயத்தில் தான் இது கோவிலில் தயாரித்து பிரசாதமாக வழங்கப்படும். திருப்பாவை விரதம் இருப்போரும்..


ஏகாதிசி விரதம் இருப்போரும் சாப்பிடும் வகையில் இதை சமைப்பார்கள். வைணவ மரபில் பகல் பத்து, ராப் பத்து என்றழைக்கப்படும் சமயம் செய்கின்ற தோசை! நெய்விட்டு, சுக்கும், மிளகும், சீரகமும் மண மணக்கும் அற்புத ருசி மிகுந்த தோசை இது! ஶ்ரீரங்கத்தில் மார்கழியில் மட்டுமே கிடைக்கும்! 


அக்காரர அடிசில், கண்ணமுது, சாத்தமுது போல இந்த சம்பார தோசையும் ஶ்ரீரங்கத்தின் ஐகான் என்றால் பெருமாள் கோபித்துக் கொள்ள மாட்டார்! சம்பார தோசை ஒரு வட்டமான பீட்ஸாவின் கனத்தில் இருக்கும்! இப்போது இந்தப் பிரசாதத்தை அந்த பீட்ஸாவை போலவே முக்கோணமாக கட்செய்து விற்கிறார்கள்! 


வெறும் தோசையையே நெய் கமகமக்க காரமாக சாப்பிடலாம்! சட்னி வகைகள், தொக்கு ஊறுகாய் வகைகளுடன் சாப்பிட்டால் இன்னும் பிரமாதமாக இருக்கும்! ஆழ்வார்கள் அரங்கனின் அருள் வேண்டுவது போல என் போன்ற அற்பர்கள் இந்திரலோகமாளும் அப்பதவி வேண்டாம் சம்பார தோசையே வேண்டும் என்போம்! 


மார்கழி வரைக்கும் காத்திருக்க முடியாதுங்க இதை வீட்டிலேயே செய்யலாமா? என்று கேட்பவர்களுக்கு இதன் ரெஸிபி 👇🏿


#சம்பார_தோசை


தேவையானவை : பச்சரிசி - 300 கிராம், கருப்பு உளுந்து - 100 கிராம், மிளகு - 1 tbs, சீரகம் - 1 tbs, சுக்குப் பொடி (dry ginger powder) - 1 tbs, நெய் - 150 கிராம், ஏலக்காய் -2 கறிவேப்பிலை - ஒரு சிறிய சரம், உப்பு - தேவைக்கு. 


{பச்சரிசி & கருப்பு உளுந்து மட்டுமே சேர்க்க வேண்டும்! தோசை வார்க்க நெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும். சுக்குப் பொடி தான் இந்த தோசைக்கு ஆதாரம்! ஏலக்காய் ஒரு ஆப்ஷன் மட்டுமே}


செய்முறை: அரிசி உளுந்து நன்கு கழுவி தனித்தனியாக 5 மணி நேரங்கள் ஊற வைத்து பின்னர் அதை கிரைண்டரில் ஒன்றாகப் போட்டு மாவை அரைத்துக் கொள்ளவும்! மாவு மிக நைஸாக அரைக்கக் கூடாது சற்று கொர கொரப்பாக இருக்கலாம்! அரைத்த மாவை இரவு முழுவதும் வைத்து புளிக்கவிடவும். 


மறு நாள் மிளகு, சீரகம், ஏலக்காயை இடிக்கவும்! மிக்ஸியில் போட்டு பவுடராக்கிவிடக்கூடாது. ஒன்றிரண்டாக உரலில் இடிப்பது சிறந்தது. தோசை வார்க்கும் முன் மாவில் உப்பு, இடித்த மிளகு, சீரகம், சுக்குப்பொடி, கறிவேப்பிலை சேர்த்துக் கலந்து தேவையான நீர் ஊற்றி அடைதோசை பதத்திற்கு கரைக்கவும். 


தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் 1 ஸ்பூன் நெய் விட்டு அதன் மீது 2 கரண்டி மாவை ஊற்றி தோசை வார்க்கவும். மாவை வட்டமாக கரண்டியில் தேய்க்க வேண்டாம் கனமாகவே இருக்கட்டும். இதை மூடி போட்டு 2 நிமிடம் வேகவிட்டு, திருப்பி மறுபுறமும் 1 ஸ்பூன் நெய்விட்டு 2 நிமிடம் மூடி வேகவிடவும்.


அவ்வளவு தாங்க பெருமாளுக்கு பிடித்த பிரசாதமான அற்புதமான ஏகாதிசி சம்பார தோசை வீட்டிலேயே தயார்! இன்னொரு விஷயம் சளி, இருமல் பிரச்சனைகளுக்கு இந்த தோசை ஒரு நல் மருந்து! இதைச் செய்து ருசித்துவிட்டு சொன்னால் மகிழ்வேன்! 


No comments:

Post a Comment