Thursday, 16 January 2025

பாட்டுப் புத்தகம்

“மறக்க முடியுமா”

75 முதல் 95 ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் பள்ளிப்பருவத்தில் இருந்த அனவருக்கும் தெரிந்த புத்தகம் இது! அன்று பள்ளிப் பாடத்தை விட நாங்கள் அதிகம் விரும்பிப் படித்தது. 5பைசா விலையில் இருந்து 50 பைசா விலை வரை வாங்கியிருக்கிறேன். கிட்டத்தட்ட 2002 வரை எனக்குத் தெரிந்து வழக்கிலிருந்தது.

அழுக்கு ஆஷ் கலரில் மட்டரக மேப் லித்தோ பேப்பரில் வரும்! ஆஃப் டோன் அச்சில் படங்கள் கருப்பு வெள்ளை நிறத்தில் மட்டுமே கிடைக்கும். பிறகு அட்டை மட்டும் வண்ணத்திற்கு மாறியது. பெட்டிக் கடைகள், பிளாட்பார கடைகளில் அன்று பரபரப்பாக விற்பனையான பொருட்களில் சினிமா பாட்டுப் புத்தகமும் ஒன்று.

பாட்டுப் புத்தகம் ஒரு கதை சொல்லியும் கூட! சினிமாவின் கதையை கதைச் சுருக்கம் என்னும் தலைப்பில் இதில் படிக்கலாம். மீதியை வெண் திரையில் காண்கன்னு முடிப்பாங்க. படத்தில் பாலுவாக ரஜினி சுமதியாக மாதவி நடித்துள்ளார்கள் என முக்கிய காரக்டர்களை எல்லாம் படிச்சிட்டு போய் படம் பார்த்தா படம் நல்லா புரியும்!

இதை பாடப் புத்தகத்தில் மறைத்து பள்ளிக்கு எடுத்துப் போய் படித்து ஆசிரியரிடம் அடி வாங்கிய அனுபவமும் உண்டு! படம், பாடல், நடிகர்கள் இவை அனைத்தும் தாண்டி கவிஞர், இசையமைப்பாளர், பாடகர்கள் பாடலின் பின்னே இருக்கிறார்கள் என்பதை பாட்டுப் புத்தகத்தின் வாயிலாலகத் தான் அறிந்து கொண்டேன்.

பல்லவி, அனுபல்லவி, சரணம், சங்கதி, தொகையறா போன்ற இசை சமாச்சாரங்கள் எல்லாம் இதன் மூலமே எனக்கு பரிச்சயம் ஆயிற்று. கிட்டத்தட்ட அது எனக்கு ஒரு பாட்டு வாத்தியார்! முரட்டுக் காளை, சகலகலா வல்லவன், அலைகள் ஓய்வதில்லை, தம்பிக்கு எந்த ஊரு, பயணங்கள் முடிவதில்லை, இளமைக்காலங்கள், மண்வாசனை..

நினைவெல்லாம் நித்யா, தென்றலே என்னைத்தொடு, முதல் மரியாதை, சலங்கை ஒலி, நல்லவனுக்கு நல்லவன், பாலைவனச் சோலை, நிழல்கள் போன்ற படங்களின் பாடல்களை விரும்பி வாங்கியது இன்னும் நினைவிலிருக்கிறது. என் மனப்பாட திறனை வளர்த்து கொள்ள உதவியதில் பாட்டுப் புத்தகத்திற்கும் இடமுண்டு.

இப்போதெல்லாம் கூகுளில் தட்டினால் பாடலின் ஜாதகமே வருகிறது. ஆனால் பாட்டுப் புத்தகத்தை படித்துத் தெரிந்து கொண்டதிலும், அதை மனப் பாடம் செய்து கொண்டதிலும் இருக்கும் ஈர்ப்பு, அதில் கிடைத்த மகிழ்ச்சி, அந்த அனுபவம் நிச்சயமாக கூகுளில் இல்லை. கிட்டத்தட்ட 2000 க்கு மேல் என் கலெக்‌ஷனில் இருந்தது.

வாழ்க்கையில் சேலம், மதுரை, சென்னை இப்படி என் வாழ்விடங்கள் மாறிய போதெல்லாம் என்னுடன் யார் இருக்கிறாரோ இல்லையோ இந்தப் பாட்டுப் புத்தகங்கள் எப்போதும் என்னுடன் இருந்தது. ஆம் இருந்தது என இறந்தகாலத்தில் சொல்லக்காரணம் சென்னையில் 2015ம் ஆண்டு வெள்ளத்தில் நான் இந்த பொக்கிஷத்தை இழந்தேன்!

பிறகு மீண்டும் சேகரிக்க ஆரம்பித்துள்ளேன். மதுரை தங்க ரீகல் தியேட்டர் அருகே நடைபாதை பழைய புத்தகக் கடைகளில் சில சமயங்களில் இது போன்ற அரிய பொக்கிஷங்கள் திடீரென கிடைக்கும். விசாரித்துப் பார்த்தேன் அங்கும் இப்போது இல்லை வந்தால் தருவதாகச் சொல்லியிருக்கிறார்கள். அபார விஞ்ஞான வளர்ச்சியில் நாம் நிறைய இழந்து விட்டோம் அதில் பாட்டுப் புத்தகமும் ஒன்று 🩷

No comments:

Post a Comment